கொலை மிரட்டல், லஞ்சம்- மதுரை அதிமுக மாநகராட்சி மண்டல தலைவர் டிஸ்மிஸ்!
மதுரை: கொலை மிரட்டல் விடுத்தது, லஞ்சம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கிய மதுரை மாநகராட்சி மண்டல அதிமுக தலைவர் ராஜபாண்டியன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அதிமுக தலைமைக் கழகம் எடுத்துள்ளது.
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்தவர் ராஜபாண்டியன். அவர் மீது கடந்த வாரம், தங்கராஜ் என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன் பேரில், கொலை மிரட்டல் மற்றும் லஞ்சம் கேட்டதாக வழக்கு பதிவு செய்தது மதுரை தெப்பகுளம் போலீஸ்.
இதையடுத்து அதிமுக தலைமைக்கு இந்த விவரம் போனது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தற்போது ராஜபாண்டியன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பகுதி செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜபாண்டியன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இருப்பினும் மண்ட தலைவர் பதவியிலிருந்து அவர் இன்னும் நீக்கப்படவில்லை. அதை மாநகராட்சிஆணையர் தான் செய்ய முடியும் என்பதால் அவர் அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று தெரிகிறது.
10 வழக்குகளுக்கும் மேல்
ராஜபாண்டியன் மீது ஏகப்பட்ட வழக்குகள் ஏற்கனவே உள்ளன. அதாவது கொலை, கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் குவிந்துள்ளன. அவரது மகன் பூமிநாதன் கடந்த மாதம் காமராஜபுரம் மற்றும் கீரைத்துறை பகுதியில் அதிகாலையில் தெருவில் நின்ற வாகனங்களை மாமுல் கொடுக்க மறுத்தததாக அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார் என்ற புகாரில், கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
விரைவில் ராஜபாண்டியனும் கைதாவார், சிறையில் தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications