சட்டசபையில் துரைமுருகனுக்கு 'பாடம் எடுத்த' ஜெயலலிதா!

சட்டசபையில் நேற்று பேரவை விதி 110ன் கீழ் சாலை கட்டமைப்பு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வாசித்தார். அதற்கு பல்வேறு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது திமுக எம்எல்ஏ துரைமுருகன் எழுந்து பேச முற்பட்டார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. அப்போது ஜெயலலிதா குறுக்கிட்டு, உறுப்பினர் துரைமுருகன், அனைவருக்கும் விதிமுறைகளைப் பற்றி பாடம் எடுப்பவர். இந்த அவையின் விதிமுறைகளை அவரே சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பேரவை விதி 110ன் கீழ் முதல்வரோ அல்லது அமைச்சரோ இந்த அவையிலே ஓர் அறிக்கையை வாசித்தால் அதன்மீது எவ்விதமான விவாதமும் கூடாது. அதைப்பற்றி எந்த விளக்கமும் கேட்கக்கூடாது. எந்த விளக்கமும், கேள்விகளும் கேட்க முடியாது என்றுதான் விதி 110 கூறுகிறது.
முந்தைய காலங்களில் விதி 110ன் கீழ் ஓர் அறிக்கையை முதல்வரோ அல்லது அமைச்சரோ வாதித்த பின்பு அதன்மீது யாரும் பேசமாட்டார்கள். ஆனால், விதி 110ன் கீழ் வாசிக்கப்படும் அறிக்கைகளுக்கு தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தவும், நன்றியைக் கூறுவதற்கும் உறுப்பினர்கள் வாய்ப்புத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அப்படிப்பட்ட வாய்ப்பை அளிப்பது சபாநாயகரின் விருப்பம் ஆகும். அவ்வளவுதானே தவிர, உறுப்பினர் துரைமுருகன் இப்போது கேள்விகளை எழுப்புகிறார். அதற்கு இந்த விதியின்கீழ் இடம் இல்லை.
இது அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பழக்கம் அல்ல. ஏற்கனவே, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பேரவை விதி 110ன் கீழ் அவர் ஓர் அறிக்கையை வைத்த பின்பு அதற்கு பாமக உறுப்பினர் ஜி.கே.மணி நன்றி தெரிவித்துப் பேசியிருக்கிறார். அது அவைக் குறிப்பிலே இருக்கிறது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications