சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 6 மன நோயாளிகள்.. காப்பகத்தில் சேர்த்த போலீசார்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த 6 மன நோயாளிகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர் ரயில்வே போலீசார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மன நோயாளிகள் சுற்றித் திரிவது வாடிக்கையாகி உள்ளது. அடிக்கடி இவர்களை போலீசார் அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.
சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் நேற்று மாலையில் ரயில் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த 6 மனநோயாளிகளை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் போலீசார் மீட்டனர். 6 பேரும் நீண்ட நாட்கள் வளர்க்கப்பட்ட தலைமுடி, அழுக்குச் சட்டையுடன் காணப்பட்டனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் வைத்தே மொட்டையடித்து முகசவரமும் செய்யப்பட்டது. பின்னர் 6 பேருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. போலீசார் கொடுத்த பேண்ட்- சட்டைகளை ஆசையாய் வாங்கி அனைவரும் அணிந்து கொண்டனர்.
இவர்களில் திருச்சியை சேர்ந்த சலீம் (19), அரக்கோணத்தை சேர்ந்த ஆறுமுகம் (40), மதுரை பொன்னாகரத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (50), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முனியாண்டி (45) மற்றும் ஊர் பெயர் தெரியாத வர்கீஸ் (35) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். 20 வயது மதிக்கத்தக்க வாய் பேச முடியாத வாலிபர் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. அனைவரும் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.
மனநல ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் குணமடைபவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மனநலம் பாதிக்கப்படுபவர்களை, அவர்களது உறவினர்களே ரயிலில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications