செத்தா 6க்கு 3, காசு இருந்தா சந்தன கட்டை .. விஜயகாந்த் பேச்சு
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியதாவது...
தேமுதிக எம்எல்ஏக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தில் அதிமுக அரசு 6 தேமுதிக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த திமுக, சிபிஎம், புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தேமுதிக எம்எல்ஏக்களை இழுத்துவிட்டால் விஜயகாந்த் தனிமைப்பட்டுவிடுவான் என்று நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. எங்கள் எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் வருகிறது. பயமுறுத்துகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகுட்டுவார்கள். தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி போராட்டம் நடக்கிறது. ஏன் ஒரு கையெழுத்து போட்டு மூடவில்லை. தமிழ்நாட்டை கொள்ளையடிக்க இருட்டாக்கி விட்டீர்கள். டெல்லிபோய் என்ன செய்யப்போகிறார்கள்.
சட்டசபையில் உட்கார விடுவதில்லை. மைக்கை ஆப் செய்துவிடுகிறார்கள். ஜெயலலிதாவை புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள். அங்கே உட்கார்ந்திருந்தால் காதில் ரத்தம்தான் வரும்.
பொறுத்திருந்து பாருங்கள். நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திக்கிறேன் என்று பாருங்கள். மக்களுக்காக அதிமுக அரசு என்ன செய்தது. பெண்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. மின்சாரம் இருக்கா. உங்கள் வீட்டில் பிள்ளைகள் படிக்கிறார்களா.
தஞ்சையில் விவசாயிகள் பாராட்டு விழா வைத்தார்கள் என்று சொன்னார்கள். அதில் எத்தனை பேர் தஞ்சையை சேர்ந்தவர்கள். மீனவர்கள் பிரச்சனையின்போது கலைஞரை கடிதம் எழுதுவதாக சொன்ன ஜெயலலிதா இப்போது என்ன செய்கிறார்.
எல்லாரும் என்ன நினைக்கிறாங்க. நாடாளுமன்றத் தேர்தலில் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும். பார்ப்போம். நீங்க (அதிமுக) எங்க வேண்டும் என்றாலும் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்க கூட்டணி வைக்கிறோமா, இல்லையா என்பது அப்புறம்.
என்னுடைய கட்சிக்காரர்கள் என்னைவிட்டு போகமாட்டார்கள். செத்தா 6க்கு 3. காசு இருந்தா சந்தன கட்டை வைப்பாங்க. காசு பணமா வைப்பாங்க. மக்களுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு போங்க. நல்லது செஞ்சிட்டு போங்க. நல்ல ஆட்சி செஞ்சிட்டு போங்க.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மண்ணை கவ்வ வைக்கணும் மக்களே. உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என்றார் விஜயகாந்த்.