அக்காவுடன் பேசிய வாலிபர் மீது ஆத்திரத்துடன் பாய்ந்த தம்பி -கத்திக்குத்து!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்கால் என்ற இடத்தில் தனது அக்காவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காதலனுடன் கட்டிப் புரண்டு நடு ரோட்டில் சண்டை போட்டார் தம்பி. பின்னர் அக்காவின் காதலனை அவர் கத்தியால் சரமாரியாக குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிலாங்காலைச் சேர்ந்தவர் ராஜா. 19 வயதான இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருக்கும் 19 வயதுதான். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ராணி கோவையில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். கோவையில் இருவரும் தங்கியிருந்ததால் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊருக்கு வந்தனர். பின்னர் ஒரே பஸ்சில் ஊர் திரும்ப முடிவு செய்தனர்.
அதன்படி வடசேரி பஸ் நிலையம் வந்தனர். இது ராணியின் தம்பிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் வேகமாக பஸ் நிலையம் வந்தார். அங்கு ராஜாவும், ராணியும் சிரித்துப் பேசியபடி நிற்பதைப் பார்த்து ஆத்திரமடைந்தார். பின்னர் ராஜாவுடன் அவர் சண்டைக்குப் போனார். இருவரும் கட்டிப்புரண்டு பஸ் நிலையத்தில் சண்டை போட்டதால் அந்த இடமே பரபரப்பாகிப் போனது.
தன் கண் முன்பு காதலனும், தம்பியும் கட்டி உருண்டதைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றார் ராணி. கடுமையாக போராடி அவர்களை விலக்கி விட்டார். ஆனால் ராணியின் தம்பி ஆத்திரத்தின் உச்சிக்கே போய் கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ராஜாவை சரமாரியாக குத்தி விட்டார்.
இதில் ராஜாவின் வலது மார்பில் குத்திக் குத்து விழுந்தது. இதனால் அவர் துடித்தார். அதைப் பார்த்த ராணியின் தம்பி தப்பி ஓடி விட்டார். பின்னர் ராணியும், அங்கிருந்தவர்களும் சேர்ந்து ராஜாவை மீட்டு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராணியின் தம்பியைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications