காதல் தகராறு: சிவகங்கை அருகே சினிமா பாணியில் சகோதரர்கள் கொலை ... பதற்றம்

சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மூத்த மகன் அருண்குமார் (வயது22), இளைய சுரேஷ் (21). இதில் அருண்குமார் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், சுரேஷ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் படித்து வந்தனர்.
சுரேஷ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதே மாணவியை இடைக் காட்டூரை சேர்ந்த செந்தில் என்பவரும் காதலித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் காதல் பிரச்சினை தொடர்பாக சமரசம் பேச செந்தில்குமார் சுரேசை ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சுரேஷ் தனது அண்ணன் அருண்குமார் மற்றும் நண்பர்கள் அபினேஷ் உள்ளிட்ட 4 பேரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். முத்துப்பட்டியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கீழக்குளம் செல்லும் சாலையில் அவர்கள் நின்று கொண்டிருந்த போது செந்தில் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். தான் விரும்பிய பெண்ணை காதலிக்க கூடாது என்றும் அவளை மறந்துவிடு என்று சுரேஷிடம் செந்தில் கூறியுள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரம் அடைந்த செந்தில் தரப்பினர் சுரேஷ், அருண்குமார் ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தினர். மேலும் நண்பர் சுரேசையும் சரமாரியாக தாக்கினர்.
இதைப்பார்த்த அபினேஷ் அங்கிருந்து தப்பினார். கத்தியால் குத்தப்பட்ட சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதையடுத்து செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர போலீசார் கொலை நடந்த இடத்திற்கு வந்து பிணமாக கிடந்த அருண்குமார் மற்றும் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நண்பர் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல் பதற்றம்
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முத்துப்பட்டி கிராமமக்கள் இன்று காலை 7.30 மணிக்கு மதுரை- சிவகங்கை மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டாலின் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று கூறிவிட்டனர். பின்னர் விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல் மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்திலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
காதல் தகராறு காரணமாக சினிமா பாணியில் அண்ணன் தம்பிகள் கொல்லப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications