நாய் கடித்து குதறிய நிலையில் ஆண் குழந்தை சடலம்…. தென்காசியில் மருத்துவமனையில் பரபரப்பு
தென்காசி: தென்காசியில் உள்ள மாவட்ட மருத்துவமனை அருகே பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று நாய் கடித்து குதறிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதரில் பிறந்த குழந்தையின் உடல் கிடப்பதாக இன்று அதிகாலை 5மணியளவில் தகவல் பரவியது. தொடர்ந்து அங்கு ஏராளமானவர்கள் கூடினர். இதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவந்து பார்த்த போது பிறந்து இரு தினங்களே ஆன ஒருகுழந்தையின் முகம் முழுவதும் இல்லாமல் நாயால் குதறப்பட்டு கிடந்தது.
இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ஒரு அட்டைப் பெட்டியில் குழந்தையின் உடலை தூக்கி போட்டுக்கொண்டு பிரேத பரிசோதனை அறைக்குள் கொண்டு சென்றனர். மேலும் நாய்கடித்து குதறிய குழந்தை யாருக்குரியது,கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை யாரும் வீசி சென்றார்களா..?எந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
மருத்துவமனை வளாகத்தில் முகம் முழுவதும் சிதைந்து போன குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள், மாவட்ட மருத்துவமனை அந்தஸ்தை பெற்ற மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலையும் நீடித்து வருவதாக புகார் கூறினர். இந்த மருத்துவமனை வளாகத்தில் நாய்தொல்லை மட்டுமின்றி சமூக விரோதிகள் தொல்லையும் உள்ளதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் முழு கவனம் எடுத்து செயல் பட்டால் இது போல் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை எனவும் பொதுமக்கள் கூறினர்.