தீபக் பரத்வாஜ் படுகொலை வழக்கில் இளைய மகன் கைது
தெற்கு டெல்லியில் கடந்த மார்ச் 26-ந் தேதி தீபக் பரத்வாஜ் படுகொலை செய்யப்பட்டார். இதில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரித்வார் சாமியார் ஒருவருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் பரத்வாஜை கொல்ல ரூ3 கோடி முதல் ரூ6 கோடி வரை கூலித் தொகை பேரம் பேசப்பட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த சாமியாருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பரத்வாஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. அவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பல நூறு கோடி ரூபாய் சொத்து குவித்திருந்தார். இதனால் தொழில் போட்டியால் அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.,
இந்நிலையில்தான் பரத்வாஜ் கொலை செய்யப்பட்ட நாள் முதல் போலீசாரின் விசாரணை வளையத்தில் இருந்த அவரது இளையமகன் நிதேஷ் பரத்வாஜை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்து தகராறு அல்லது பணத்துக்காக அல்லது இரண்டுக்குமாகவே பரத்வாஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால்தான் நிதேஷை போலீசார் கைது செய்திருப்பதாக தெரிகிறது.