சட்டசபையில் இருந்து தி.மு.க- தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 'குண்டுகட்டாக' வெளியேற்றம்
சென்னை: சட்டசபையில் நேற்று கர்நாடக அரசு பெண்ணையாற்று நீரை திசை திருப்புவது குறித்து நடந்த விவாதத்தின்போது ஏற்பட்ட மோதலில் திமுக எம்.எல்.ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அவைக் கட்டுப்பாட்டை மீறியதால் இன்றும் நாளையும் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கும் வகையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், நேற்று சட்டசபைக்கு வராததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், சிவசங்கர் ஆகியோர் இருவரும் இன்று சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடிந்தது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் சில திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டதும் அதை வரவேற்று அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள்.
இதன் பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ஜெ.அன்பழகன், சிவசங்கர் ஆகிய இருவரும் எழுந்து ஒரு முக்கிய பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், இதை அனுமதிக்க மறுத்தார் சபாநாயகர் தனபால். மேலும் நீங்கள் பேசியது எதுவுமே அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றார்.
ஆனாலும் இருவரும் தொடர்ந்து நின்று கொண்டே வாக்குவாதம் செய்தனர். இதனால் அவர்கள் இருவரையும் அவையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவை காவலர்கள் உள்ளே வந்து ஜெ.அன்பழகன், சிவசங்கர் ஆகியோரை வெளியேற்றினர்.
இனி தேமுதிகவுக்கு கடைசியாகவே பேச வாய்ப்பு..
இதையடுத்து சட்டசபையில் பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு எதிர்க்கட்சியான தே.மு.தி.கவை முதலில் பேச அழைக்காததற்கான காரணம் குறித்து சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
ஒவ்வொரு மானிய கோரிக்கை மீதும் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் முதலாவதாக தே.மு.தி.கவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் 20, 30 நிமிடங்களுக்கு மேலாக அவையில் பேசுகிறார்கள். ஆனாலும் அவைக்கு வெளியே சென்று தங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள், வெளிநடப்பு செய்கிறார்கள்.
இதனால் தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு இனிமேல் கடைசியாக பேச வாய்ப்பு கொடுக்கலாம் என்று சட்டசபை அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த மானிய கோரிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி முதலாவதாக பேசலாம் என சபாநாயகர் அழைத்தார்.
இதற்கு தே.மு.தி.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியான எங்களுக்குத்தான் முதலில் வாய்ப்பு தர வேண்டும் என்று சபாநாயகரை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
இதையடுத்து அனைத்து தே.மு.தி.க உறுப்பினர்களையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்தீபன், சேகர், வெங்கடேசன் உள்பட தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications