மாணவிகளை கேலி செய்த கும்பல் - தட்டிக்கேட்ட பெற்றோர்: கட்டையால் தாக்கிய இளைஞர்கள்
சேலம்: சேலத்தில் பள்ளி மாணவிகளை கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெற்றோர்களை உருட்டுக்கட்டையால் அடித்த இளைஞர்கள் தப்பி ஓடியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, ஆறாவது வார்டு முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், ஆத்தூருக்கும் முல்லைவடிக்கும் இடையே உள்ள வசிஷ்ட நதி வழியாக கடந்து சென்றுவருகின்றனர். அந்த மாணவிகளை பின் தொடரும் வாலிபர்கள் சிலர், கேலி, கிண்டல் செய்து வந்ததுடன், பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலை, பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவியர் ஐந்து பேரை, சுற்றி வளைத்த கும்பல், கேலி செய்து எல்லை மீறி சிலுமிஷம் செய்துள்ளனர். இதனால், அழுதபடியே வீட்டிற்கு சென்ற அந்த மாணவிகளை பார்த்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலுமிஷம் செய்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது வார்டை சேர்ந்த வாலிபர்கள், 20-க்கும் மேற்பட்டோர், இளங்கோ தெருவில் புகுந்து, கற்களை வீசியும், வீடு புகுந்து, உருட்டு கட்டையால் அங்கிருந்த பொதுமக்களை தாக்கினர்.
தகவலறிந்த ஆத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அதற்கு முன்பாக அக்கும்பல், வசிஷ்ட நதி வழியாக தப்பியது. தாக்குதலில், 30 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, முல்லைவாடி இளங்கோ தெரு பகுதியில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications