புதிய மாற்றங்களுடன் பாஸ்போர்ட்: நாளை முதல் புழக்கத்தில்

வழக்கமாக, பாஸ்போர்ட்டின் இடதுபக்க உள் அட்டையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் இருக்கும். அதே போல், வலதுபக்க உள் அட்டையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால் தற்போதைய புதிய நடைமுறைப்படி இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில் லேமினேட் செய்யப்படும். அதேபோல், வலதுபக்க உள் அட்டையில் காணப்படும் அனைத்து குறிப்புகளும் 35வது பக்கத்தில் லேமினேட் செய்யப்படும்.
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பழைய முறையில் பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது என்றார்.
இம்மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருவதால் புதிய மாற்றங்கள் அடங்கிய 50,000 பாஸ்போர்ட்கள் நாசிக்கில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் புதிய பாஸ்போர்ட்கள் புழக்கதிற்கு வரவுள்ளன.












Click it and Unblock the Notifications