தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் களவாடப்படும் மக்கள் பணம்...!
இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பற்றவர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் கொண்டு வரப்பட்டதுதான் நூறு நாள் வேலை திட்டம். இந்த திட்டத்தில் மக்களுக்கு கொடுக்கப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கிராம நிர்வாக அதிகரிகள் பாக்கெட்டுக்களுக்கு போகிறது. கடந்த 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 8 வயது குழந்தைகள் முதல் 95 வயது வரை உள்ள கண் தெரியாத வயதானவர்கள் வரை இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் மட்டும் 7,30000 டாலர் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
இதன் மூலம் மக்களின் வரிப்பணம் அடுத்தவர்களின் பாக்கெட்டிற்கு போகிறது. குளம், குட்டைகள் பராமரித்தல், நீராதாரங்களை மேம்படுத்துதல் போன்றவை இந்த வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. ஆனால் இதுவரை எத்தனை பணிகள் இந்த திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி கணக்கிட யாரும் இல்லை.
மத்திய அரசின், "100 நாள் வேலைத் திட்டம்' எனப்படும், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (என்.ஆர்.இ.ஜி.எஸ்.,), தொடர்பான சட்டம், செப்., 2005ல் கொண்டு வரப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.

100 திட்டங்களுக்கு 2000 வழக்குகள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம். பிஷன்பூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்த மான நிலத்தில் ஒரே ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தின் பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. நீர் நிலைகளை மேம்படுத்தும் எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

தினக்கூலி ரூ.135
நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு ரூ.135 ரூபாய் தினக்கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாரம் தோறும் சனிக்கிழமை மாலை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் 135 ரூபாய்க்கு பதிலாக வெறும் 80 ரூபாய்தான் தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது. இதுபோன்று களவாடப்படும் பணம் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், ஆகியோரின் பாக்கெட்டுகளுக்கு போகிறது.

போலி அட்டைகள்
கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் வளர்ச்சிக்காக 1.8 டிரில்லியன் ரூபாய் பணம் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14 மத்திய பட்ஜெட்டில் 330 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்ப்ட்டுள்ளது. ஆனால் மக்கள் பணம் மக்களுக்குப் போய் சேராமல் போலி அட்டைகள் தயாரித்து பணத்தை களவாடிக்கொள்கின்றனர்.

கைரேகைப் பதிவு
கூலித்தொழிலாளிகள் பெரும்பாலும் கையெழுத்து போடுவதற்குப் பதிலாக கைரேகையை பதிவு செய்கின்றனர். இதனால் தொழிலாளி இறந்து போனாலும் அவர்கள் பெயரில் போலி கைரேகை பதிவு செய்து தினசரி பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

களவு போகும் ஏழைகள் பணம்
ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் இதுவரை 7,30000 மில்லியன் டாலர் பணம் களவாடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதுபோன்று ஏழைகளின் பணம் களவாடப்பட்டு வருகிறது.

5 கோடி பேர் 5 பைசா திருடினால்...
ஏழை மக்களின் பணம் இவ்வாறு களவாடப்படுவதை ஊழல் என்று கூறுவதற்கில்லை என்கின்றனர் சிலர். இது ஒரு கசிவு. அதாவது வெள்ளம் போகும் போது தண்ணீரில் கசிவு ஏற்படுவதில்லையா? அதுபோல அரசாங்கத்தின் பணம் மக்களுக்குப் போகும் போது கொஞ்சம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் எப்படி செயல்படுகிறது?
பிப்., 2, 2006ல், தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், முதன் முதலில் துவக்கப்பட்ட இத்திட்டம், பிறகு, மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 90 சதவீத மத்திய அரசு நிதியிலும்; 10 சதவீத மாநில அரசு நிதியிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒரு மணிநேரம் மட்டுமே வேலை
எட்டு மணி நேரம் வேலை செய்யவேண்டும். ஆனால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே, பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்றும்; கிராம ஊராட்சிகளில், வேலை செய்யாமலேயே வேலை செய்ததாக பொய்யாகக் கணக்குக் காட்டி, ஊதியத்தை பங்கிட்டுக் கொள்வதாகவும், தமிழ்நாட்டிலும் புகார் எழுந்துள்ளது.

என்ன வேலை செய்யப்பட்டுள்ளது?
பிப்ரவரி 2006 முதல், மார்ச் 2011 வரை, இத்திட்டத்திற்காக மொத்தமாக, 5,553 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டு, 82 ஆயிரத்து 400 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டவாரியாக நடந்த இந்த பணிகளை, மீண்டும் மறு ஆய்வு செய்தாலே, எந்த லட்சணத்தில் இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது என்ற உண்மை நிலை தெரிய வரும்.

தொழிலாளர்களுக்கு பாதிப்பு
இதுதவிர, அரசு நிர்ணயித்த ஊதியத்தில், ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு கொடுக்கமால், சுருட்டிக் கொள்வதாகவும் புகார் பரவலாக உண்டு. கிராம ஊராட்சி ஊழியர்கள், கிராம ஊராட்சி நிர்வாகிகள் மீது, புகார்கள் வந்துள்ளன. இதனால் பயனடைய வேண்டிய கிராம தொழிலாளர்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வங்கி மூலம் ஊதியம்
இந்நிலையில், முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், மாநில அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, பணத்தை கிராம ஊராட்சி ஊழியர்களும், கிராம ஊராட்சி நிர்வாகிகளும் கையாள்வதை தடை செய்ய, வங்கி மூலம் ஊதியம் வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக, வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், வங்கிக் கணக்கு துவங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மக்கள் தங்களின் கூலியை நேரடியாக பெறலாம்.

மக்கள் பணம் மக்களுக்கு
இதனிடையே டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 8 ஆவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நாள் விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்நலத் திட்டத்தின் கீழ் 4 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும் இதன் மூலம் அரசின் நலத் திட்ட மானியங்களை நேரடியாகப் பயனாளிகளுக்குச் சென்று சேர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எளிதாகும் என்றும் கூறியிருக்கிறார். இது வரை இத்திட்டத்தின் மூலம் 8 கோடி பேர் பயனுற்றுருக்கின்றனர் என்றும், இதில் 47 சதவீதம் பேர் பெண்கள் என்றும் கூறியிருக்கிறார்.

ஊழல்கள் களையப்படவேண்டும்
இரண்டாவது பசுமைப் புரட்சியின் இலக்குகளை எட்டுவதற்கு இத்திட்டம் பெரும் உதவியாய் இருக்கும் என்றும் இதில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் மற்றும் பெண்களை இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விடாது தடுக்கும் காரணிகள் போன்றவை களையப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி கூறியுள்ளார்.

ஊழல் பெருச்சாளிகளுக்கு இடையே
ஏழை மக்களுக்காக ஒதுக்கப்படும் அரசின் பணம் ஊழல்வாதிகளின் பாக்கெட்டுகளுக்கு போவது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் ஒரு வேளை உணவிற்குக் கூட வழியற்ற ஏழைகளுக்கு தினசரி 100 ரூபாய் வரை கூலி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழல் பெருச்சாளிகளுக்கு இடையே சில நல்ல மாவட்ட ஆட்சித்தலைவர்களும், பஞ்சாயத்துத் தலைவர்கம் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான மூன்று விருதுகளை தமிழ்நாடு மாநிலம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications