‘ரவி’ பெயரில் ரவுடிகள் ராஜ்ஜியம்... கிறுகிறுக்கும் போலீஸ்...!!!
சென்னை: ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்தாலே குழப்பம் வரும் அதுவும் ஒரே பெயரில் 20 பேர் இருந்தால் குழப்பம் கும்மியடிக்காதா என்ன? ரவுடிகளுக்கும் ரவி என்ற பெயருக்கும் என்னதான் தொடர்போ தெரியவில்லை.
தமிழகத்தில் பிரபல ரவடிகளின் பட்டியலில் உள்ள ரவுடிகள் 20 பேர் ரவி என்ற பெயரில் இருப்பதால் கிறுகிறுத்துப் போயுள்ளனர் போலீசார்.
‘மொட்டை' ரவி, ‘முட்டை' ரவி, ‘கட்டை' ரவி, ‘மூக்கு' ரவி, ‘பல்லு' ரவி, ‘குண்டு' ரவி, ‘குள்ள' ரவி, ‘காது குத்து' ரவி, ஸ்டீல் ரவி, ‘மாட்டு' ரவி, ‘பொருள்' ரவி என ரவி பட்டியல் நீள்கிறது.

பட்டப்பெயர் எப்படி வருகிறது?
எப்போது மொட்டைத் தலையுடன் இருப்பதால் மொட்டை ரவி என்று அழைக்கப்படுவதாக கூறும் போலீசார், முட்டை வியாபாரம் செய்ததாலோ, அல்லது முட்டையில் ஆசிட் ஊற்றி அடிப்பதாலோ முட்டை ரவி என்று பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர்.

அடையாளம் பெயரானது
இதில் நீளமூக்கு உள்ளதால் மூக்கு ரவி என்றும் எடுப்பான பல் இருந்த காரணத்தால் பல்லு ரவி என்றும் பெயர் வைத்துள்ளனர். குண்டாக இருந்தவர் குண்டு ரவி என்றும் குள்ளமாக இருந்த காரணத்தால் குள்ள ரவி என்றும் பெயர் வைத்திருக்கின்றனர்.
இது தவிர மாட்டு வியாபாரம் செய்த ‘மாட்டு' ரவி, நாய் வளர்த்த ரெளடி ‘நாய்' ரவி, என்றும் பட்டப் பெயர் வைத்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு ஈரோட்டில் கொல்லப்பட்ட ‘ஸ்டீல்' ரவி, ஸ்டீல் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

ஏரியா பெயர்கள்
கொலை, கொள்ளை சம்பவத்திற்கு ஆயுதங்களை சப்ளை செய்தவர், ‘பொருள்' ரவி. இது தவிர ஏரியாவின் பெயர்கள் ‘மட்டான் குப்பம்' ரவி, ‘பல்லாக்கு' ரவி, ‘தோப்பு' ரவி, என பட்டப்பெயராக இடம் பெற்றுள்ளது. ஆனால் ‘ஜெர்மன்' ரவி என்ற பெயர்தான் எப்படி வந்தது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளனர் போலீசார்.

என்கவுண்டர், சரண்டர்
‘வெள்ளை' ரவி 2007ம் ஆண்டு ஆண்டு ஓசூரில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கெல்லப்பட்டான். காது குத்து ரவி சமீபத்தில் நடந்த ஒரு கொலையில் சரண்டர் ஆகியுள்ளான்.

நிலமோசடியில் கைது
நில மோசடி தொடர்பாக கைதான ‘ஜெர்மன்' ரவி போலி பத்திரம் மூலம் தலைமை ஆசிரியர் ஒருவரிடம் இருந்து 47 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளான். தலைமை ஆசிரியர் பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டவே, அவர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான் ‘ஜெர்மன்' ரவி

‘ஸ்டீல்’ ரவி கொலையில் தொடர்பு
ஈரோட்டில் கொலையான ஸ்டீல் ரவுடிக்கும் முக்கிய போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அருண் பிரசாத்தின் செல்போனை ஆராய்ந்த போது கொலை நடப்பதற்கு முன்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் 29 முறை பேசியிருக்கிறாராம். ஆனால் இதனை போலீஸ் தரப்பில் மறைக்க முயல்வதாகவும் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
ரவி என்ற பெயரில் எத்தனையோ ரவுடிகள் இருக்க அதுவே குழப்பத்தில் கும்மியடிக்கிறது. இதில் ஸ்டீல் ரவி கொலையில் போலீசுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் அதை மறைப்பதா இல்லையா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications