பதவி உயர்வுக்காக உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கினார்: கடற்படை அதிகாரி மனைவி போலீசில் புகார்
கொச்சி: கடற்படையைச் சேர்ந்த தனது கணவர் பதவி உயர்வு பெற தன்னை மூத்த அதிகாரிகளுக்கு விருந்தாக்கியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளம்பெண் கொச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்திய கடற்படையில் பணியாற்றுபவர் ஒரிசாவைச் சேர்ந்த ரவி கிரண். அவருக்கும் ஒரிசாவைச் சேர்ந்த சுஜாதா(25) என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் நடந்தது. தற்போது ரவி கேரள மாநிலம் கொச்சியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுஜாதா கொச்சி துறைமுக போலீசாரிடம் கடந்த 4ம் தேதி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் பதவி உயர்வு பெறவும், சில சலுகைகளைப் பெறவும் கடந்த 2 மாதங்களாக என்னை பல மூத்த அதிகாரிகளுக்கு விருந்தாக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னை அடித்து, ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுவார். அவர் மீதும் என்னிடம் தவறாக நடந்த பிற கடற்படை
அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அவரது புகாரின்பேரில் ரவி கிரண் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை கடற்படை மறுத்துள்ளது. கணவன் மனைவி இடையேயான பிரச்சனையில் சுஜாதா இவ்வாறு புகார் கொடுத்துள்ளார் என்று தெற்கு கடற்படை தெரிவித்துள்ளது.
சுஜாதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ரவி முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications