சென்னையில் பெரும்பாலான போலீசாரிடம் இல்லாத துப்பாக்கி ரவுடிகளிடம் இருக்கு: ராமதாஸ் கவலை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வட இந்திய மாணவர்களை மையமாக வைத்து அண்மைக் காலமாக சென்னையில் வெளியாகும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. சென்னையில் அடிக்கடி வட இந்திய மாணவர்களால் மற்றவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுவது, கடத்தப்படுவது, தாக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் சிலர், தங்களது மாநிலங்களில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து இங்குள்ள ரவுடிகளுக்கு விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரூ.2500-க்கு ஒன்று என்ற விலையில் கள்ளத் துப்பாக்கிகள் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதாகவும், இதனால் சாதாரணமான ரவுடிகளின் கைகளில் கூட துப்பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகக் காவல்துறையில் பெரும்பாலான காவலர்களிடம் துப்பாக்கி இல்லாத நிலையில், ரவுடிகளின் கையில் துப்பாக்கிகள் அதிகரித்து வருவதாக வெளிவரும் செய்திகள் எதிர்காலத்தில் எத்தகைய சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையை அளிக்கின்றன.
வட இந்திய மாணவர்களின் வன்முறைக் களமாக சென்னையும், புறநகர் பகுதிகளும் மாறியதற்கு காரணமே சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும், பொறியியல் கல்லூரிகளும் தான். கட்டணக்கொள்ளை நடத்தும் நோக்குடன் தங்களது கல்லூரிகளில் வட இந்திய மாணவர்களைச் சேர்க்கத் துடிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், அதற்கு ஆள் பிடிப்பதற்காக தங்களது வட இந்திய முன்னாள் மாணவர்களையே தரகர்களாக அமர்த்தியுள்ளன. மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடித்து தரும் தரகர் வேலை பணம் கொழிக்கும் ஒன்றாகிவிட்டதால், அதில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை மிரட்டவும், தாக்கவும் துப்பாக்கிகளை சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர். மாணவர் சேர்க்கை இல்லாத நேரத்தில் வழிப்பறி, கொள்ளை போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் சென்னை போக்கிரிகளின் புகலிடமாகி, சாதாரண மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். ஒரு காலத்தில் வன்முறைக் காடாக விளங்கிய பீகார் இப்போது வளர்ச்சியிலும், அமைதியிலும் தமிழகமாக மாறி வருகிறது. அதே நேரத்தில் அமைதியாக இருந்த தமிழகம் இன்னொரு பீகாராக மாறிவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் நான் இதையெல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு காப்பாளரை நியமித்து மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பணம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட கல்வி நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாததால் மாணவர் விடுதிகள் ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமாக மாறிவிட்டன.
சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட இந்தியர்கள் 5 பேர் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை அந்தந்த பகுதிக்கான காவல் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையிட்டது. ஆனால், இந்த உத்தரவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. இனியாவது சென்னைக் காவல்துறை விழித்துக் கொண்டு, சென்னையில் தங்கியுள்ள வட இந்திய மாணவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அவர்களை கண்காணிக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் மாணவர்கள் என்ற போர்வையில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அதை முறியடிக்க அந்த விடுதிகளில் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்களை தண்டித்து, திருத்த மறுக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களையும் சில சக்திகள் தூண்டிவிட்டு, தங்களது சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. இத்தகைய மாணவர்களை அந்த சக்திகள் மூளைச் சலவை செய்து, அவர்களின் விடுதி அறைகளில் ஆயுதங்களை பதுக்கிவைப்பதால், இந்த விடுதிகளிலும் அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட வேண்டும். இதற்காக திறமையான, நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட புதிய படை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளால் அப்பாவி மாணவர்கள் எவரும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications