ராகுல், சோனியா தொகுதியின் விஐபி அந்தஸ்து, பவரை பறித்த அகிலேஷ் யாதவ் அரசு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேத்தி ஆகியவை உத்தர பிரதேசத்தில் உள்ளன. அந்த 2 மாவட்டங்களுக்கும் விஐபி அந்தஸ்து அளித்தது சமாஜ்வாடி கட்சி அரசு. பிற மாவட்டங்கள் மின்தடையால் அவதிப்பட இந்த 2 மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்கள் மின்தடையில்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையே காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இடையேயான உறவு முன்பு போல சுமூகமாக இல்லை. இந்நிலையில் அகிலேஷ் யாதவ் அரசு ரேபரேலி மற்றும் அமேத்தியின் விஐபி அந்தஸ்தை பறித்ததோடு மின்தடையில்லா மாவட்டம் என்ற அந்தஸ்தையும் பறித்துவிட்டது. இத்தனை காலமாக மின்தடை என்றால் என்னெவென்று அறியாத இந்த 2 மாவட்ட மக்கள் தற்போது 4 மணிநேரத்திற்கும் அதிகமாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
கோடை காலத்தில் மின்தேவை அதிகரிப்பதால் தான் இந்த 2 மாவட்டங்களிலும் மின்தடை செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் மெய்ன்பூரி(சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தொகுதி), கன்னௌஜ்(அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிளின் தொகுதி), இதாவா( முலாயமின் சொந்த மாவட்டம்), சாம்பல்(முலாயமின் உறவினர் தர்மேந்திர சிங் யாதவின் தொகுதி) மற்றும் ராம்பூர்(கேபினட் அமைச்சர் முகம்மது ஆலம் கானின் தொகுதி) ஆகியவைக்கு மட்டும் தங்கு தடையில்லாமல் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications