இலங்கை போருக்கு இந்தியாவின் பொறுப்பின்மைதான் காரணமாம்... புத்தியைக் காட்டும் கோத்தபயா!
கொழும்பு: இந்தியா பொறுப்புடன் நடந்துகொண்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான போர் 30 ஆண்டு நடந்திருக்காது என இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், அந்த நாட்டின் ராணுவத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகப் பணியாற்றியவர் ஹர்தீப் சிங் பூரி. இவர் இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்த கடைசி 100 நாட்களில் (2009-ம் ஆண்டு ஜனவரி-மே) நடந்த போர்க்குற்றங்கள் குறித்து எழுந்துள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தார்.
அதில், ‘இந்தக் கருத்துக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், அந்த நாட்டின் ராணுவத்துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே பதில் அளித்துள்ளார். இதை இலங்கை நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் பின்வருவனவற்றை கூறி இருக்கிறார்.

ராஜபக்சேயின் அரசு பொறுப்பல்ல...
இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசு பொறுப்புடன் நடந்துகொண்டிருந்தால், விடுதலைப்புலிகளுடன் 30 ஆண்டு போர் நடந்திருக்காது. இலங்கையில் தமிழ் மக்கள் படுகின்ற துயரங்களுக்கு ராஜபக்சேயின் அரசுதான் பொறுப்பு என்று சிலர் நேரடியாக இலங்கை மீது குற்றம் சுமத்தி களங்கப்படுத்துகின்றனர்.

இந்தியாதான் காரணம்....
இலங்கையில் தீவிரவாதம் வேரூன்றியதற்கு இந்தியாதான் காரணம். இந்தப் பொறுப்பிலிருந்து இந்தியா ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது.

சிங்கள ராணுவத்தின் தீவிர போர்...
3 ஆண்டு காலம் இலங்கையில் சிங்கள ராணுவம் தீவிர போர் நடத்தி தீவிரவாத்தை ஒழித்திருக்காவிட்டால் இன்று வரை அனைத்து தரப்பு மக்களும் போரினால் இன்னலுற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.

போர்க்குற்றங்கள் ....
இலங்கையில் போரின் கடைசி 100 நாட்களில் நடந்துள்ளதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த 100 நாட்களில் நடந்த வன்கொடுமைகள் குறித்து இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறவர்கள், இங்கே தீவிரவாதம் வேர் விட்ட காலம் பற்றி அமைதியாக இருக்கின்றனர்.

இந்திரா காந்தி அரசு நிதியுதவி ...
இலங்கையில் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அப்போதைய இந்திரா காந்தி அரசு நிதியுதவி அளித்ததுடன் போராளிகளுக்கு ராணுவப்பயிற்சி அளித்தது என்பது இலங்கையின் குற்றச்சாட்டு

இலங்கை தீவிரவாதிகள்...
இந்தியாவின் தலையீடுதான் இந்தப் பிராந்தியத்தில் பெரிய பிரச்சினைக்கு வழிநடத்தியது. இந்தியாவால் பயிற்சி அளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள் (விடுதலைப்புலிகள்) மாலத்தீவில் 1988 நவம்பரில் தாக்குதல் நடத்தினர்.

சர்வதேச சமுதாயம்...
இந்தியா தலையிட்ட காலம் தொட்டு முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். இதை சர்வதேச சமுதாயம் பரிசீலிக்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவின் தொடர்பு பற்றி விசாரணையில் பூரி உதவ முடியும்.

ஜே.என். தீட்சித் புத்தகத்தில்...
இலங்கையில் இந்திய தூதராக இருந்த ஜே.என். தீட்சித் எழுதியுள்ள புத்தகத்தில், ‘ இலங்கையில் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டு மிகப்பெரிய தவறான கொள்கை முடிவுகளில் ஒன்றாகும்' என தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications