சென்னையில் இளம் தம்பதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை குடும்பத்தகராறு காரணமா?
உயிரிழந்த தம்பதியின் பெயர் அறிவழகன் (35), அபிராமி (26) என்பதாகும். அறிவழகன் தர்மபுரியைச் சேர்ந்தவர், அபிராமி கோவையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டுதான் ஆகிறது.
மணப்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த அறிவழகன் திருமணத்திற்குப் பின்னர் ஜமீன் பல்லாவரம் வைத்தியலிங்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார். மனைவி அபிராமி எம்.எஸ்.சி பட்டதாரி என்பதால் சமீபத்தில்தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் தற்கொலை
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கள் குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து இருவரும் குதித்துள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அறிவழகனும், அபிராமியும் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக்கண்டு, காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பல்லாவரம் போலீசார், அபிராமி விழுந்த இடத்திலேயே உயிரிழந்ததை அறிந்து, அறிவழகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அறிவழகனும் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இருவரின் உடல்களும் பிரேதப்பரிசோதனைக்குப்பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் குறித்து பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைக்கு காரணம் என்ன?
தற்கொலைக்கான காரணம் பற்றி கடிதங்கள் எதுவும் இல்லை. கணவன்- மனைவி இருவரும் மிகவும் அமைதியானவர்கள்.
ஒற்றுமையாக வாழ்ந்ததாகவே பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அறிவழகன் கைநிறைய சம்பாதித்ததால் பணக்கஷ்டத்துக்கும் வாய்ப்பு இல்லை.
தம்பதிகள் இருவரும் நான்கு நாட்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 10ம் தேதி வந்துள்ளனர். வியாழக்கிழமை இரவு தகராறு நடந்துள்ளது. அதில் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
திருமணமான ஓர் ஆண்டிலேயே இளம் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாவரம் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.