இலங்கை கடற்படை அட்டூழியம்… காரைக்கால் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்
காரைக்கால் கிழிஞ்சல்மேட்டை சேர்ந்த ராஜ் (வயது 30) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் ரமேஷ் (32), செல்வம் (29), வேதநாயகம் (30), வீரபாகு (45), சத்தியநாதன் (25) காரைக்கால் மேட்டை சேர்ந்த வீரப்பன்(39) ஆகிய 7 பேர் மீன்பிடிக்க சென்றனர். கோடியகரையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது மீன்பிடி படகில் சாதாரண உடையணிந்த இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் பெட்ரோல் குண்டுகளை மீன்பிடி படகை நோக்கி வீசினார்கள். எனவே மீனவர்கள் படகை நிறுத்தினார்கள். உடனே இலங்கைப் படையினர் படகு அருகே வந்து உள்ளே ஏறினார்கள். அங்கிருந்த மீனவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
கோடாரி, அரிவாள், இரும்பு குழாய், பணிகட்டிகளை அள்ளிபோட பயன்படுத்தும் சவுல் ஆகியவற்றால் தாக்கினார்கள். இதில் வேதநாயகம், வீரபாகு ஆகியோருக்கு கோடாரி வெட்டு விழுந்தது. சத்தியநாதனுக்கு கண் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலை வாக்கி டாக்கி, ஜி.பி.ஸ். கருவி ஆகியவற்றை கடலில் வீசும்படி எச்சரித்தனர். இதனால் அவற்றை மீனவர்கள் கடலில் வீசினார்கள்.
அதைதொடர்ந்து அவர்களை மிரட்டி விட்டு இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றனர். படுகாயம் அடைந்த நிலையில் படகை ஓட்டிகொண்டு மீனவர்கள் காரைக்கால் வந்தனர். இன்று காலை 6 மணிக்கு படகு காரைக்கால் வந்து சேர்ந்தது. 8 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் மீனவர்கள் மீது கடந்த மாதம் இருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒருமுறை மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். 5 நாட்களுக்கு முன்பு காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்களை சிங்கள படையினர் கைது செய்து சிறைவைத்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.