சுதாகரன் மீதான போதைப் பொருள் வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும் அவரது தோழி சசிகலாவின் அக்காள் மகனுமான சுதாகரன் வீட்டில் இருந்து 2001-ம் ஆண்டு 16 கிராம் ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அவர் மீது போதைப் பொருள் வைத்திருந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது நண்பர் தோட்டம் பாஸ்கரன் மீதும் ஹெராயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த 2 வழக்குகளும் சென்னையில் உள்ள போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நீதிபதி ராமமூர்த்தி முன்பு இன்று வழக்கறிஞர்களின் இறுதி வாதத்துக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் தாமல் கண்ணாவும், சுதாகரன், பாஸ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் கே. என்.சுப்பிரமணியமும், ஆர். அன்புக்கரசும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பு வரும் 19-ந் தேதி பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications