கோத்ரா ரயில் எரிப்பின் போது ரயில்வே அமைச்சராக இருந்தது நிதிஷ்தானே: பாஜக கேள்வி
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டுகிற பீகார் முதல்வர் நிதிஷ்குமார்தானே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார் ..அவரிடம் இருந்து மோடி மதச்சார்பற்றவர் என்ற சான்றிதழ் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை என்று என்று பாரதிய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
நரேந்திரமோடியை பாஜக ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக்கூடாது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மோடியின் ஆட்சியில் தான் குஜராத் கலவரம் நடந்தது. அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் சிறுபான்மையினர் ஓட்டு விழாது என்றும் நிதிஷ்குமார் பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி கூறுகையில், 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்படுகிறது. அப்போது மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இருந்தது. கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட போது நிதிஷ்குமார்தான் ரயில்வே அமைச்சராக இருந்தார். இதில் நரேந்திரமோடியை மட்டும் குறை சொல்லக்கூடாது. நிதிஷ்குமாரிடம் இருந்து மோடி மதச்சார்பற்றவர் என்ற சான்றிதழை நாங்கள் பெறத் தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications