நல்லா உத்துப் பாருங்க, இவர் யாருன்னு தெரியுதா..?
பாட்னா: அமைதிப் படை சத்யராஜை உங்களுக்கு மறந்திருக்காது. அமாவாசையாக இருந்து நாகராஜசோழனாக மாறி மொட்டை கெட்டப்புடன் கலக்கியிருப்பார். அதே பாணியில் லாலு பிரசாத் யாதவும் திடீர் மொட்டை கெட்டப்பில் அசத்தியுள்ளார்.
பீகாரின் அசைக்க முடியாத அரசியல்வாதியாக வலம் வந்தவர் லாலு பிரசாத் யாதவ். முதல்வராக நீண்டகாலம் இருந்தவர். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து நெருக்கடிகள் அதிகரிக்கவே பதவி விலகினார். ஆனால் அதிரடியாக அடுப்பங்கரை மற்றும் மாட்டுக் கொட்டகை வரை மட்டுமேவலம் வந்து கொண்டிருந்த தனது மனைவியை முதல்வராக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
தற்போது தேசிய அரசியல் அரங்கில் வலம் வந்து கொண்டுள்ள லாலு பிரசாத் யாதவ் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது நம்ம லாலுஜிதானா இது என்று செய்தியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். காரணம், லாலுவின் தலை.
அழகான மொட்டைத் தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டார் லாலு. இது ஷேவ் செய்யப்பட்டதா அல்லது முடி உதிர்ந்து போய் விட்டதா என்று தெரியவில்லை. இதை செய்தியாளர்களும் கேட்கவில்லை, லாலுவும் விளக்கவில்லை.
லாலு என்ன செய்தாலும் அது செய்தியாகி விடும். அவரது இந்த மொட்டைத் தலையும் தற்போது செய்தியாகி விட்டது - புகைப்படத்துடன்.