ஈவ்டீசிங்கை தட்டிக்கேட்ட மாணவர் சுட்டுக்கொலை
நாக்பூர்: நாக்பூரில் ஈவ்டீசிங்கை தட்டிக்கேட்ட மாணவரைச் சுட்டுக்கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ரோஷன் சம்ரித். இவர் அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவரது தோழி பின்தொடர்ந்து சென்றார்.
இருவரும் பேசியவாறே சென்றனர். இதை நோட்டமிட்ட 3 பேர் கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களை நீண்ட தூரம் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அந்த பெண்ணை கேலி-கிண்டல் செய்ததைப் பார்த்த மாணவர் ரோஷன் தனது தோழியை முன்னே செல்லவிட்டு பின்னால் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மோட்டார் சைக்கிளைக் கொண்டு அவரை இடித்து தள்ளியது. பின்னர் அந்தப் பெண்ணிடம் செல்போன் நம்பரைக் கேட்டு மானபங்கம் செய்ய முயன்றனர். இதை ரோஷன் தட்டிக் கேட்டார். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அந்த கும்பலில் ஒருவன் திடீர் என்று துப்பாக்கியால் ரோஷனை சுட்டான். இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதைத் தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
இந்த மோதலை ரோட்டில் சென்ற யாரும் தட்டிக்கேட்க முன் வரவில்லை. குண்டடிப்பட்டு விழுந்தபோதும்கூட காப்பாற்ற யாரும் வரவில்லை. அப்போது தற்செயலாக வந்த ரோஷனின் நண்பர் ஒருவர் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications