பெங்களூர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் கேட்பாரற்று நின்ற 40 பைக்குகள் பறிமுதல்
சென்னை: நள்ளிரவில் போலீஸ் சோதனை சென்ற போது அனாதையாக நின்ற 40 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இதில் கூடுதல் கமிஷனர்கள் ராஜேஷ்தாஸ், தாமரைக்கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது, சோதனை நடத்துவது என அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு போலீசார் சென்னை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சரியான ஆவணங்கள் இன்றி சென்ற 79 மோட்டார் சைக்கிள்கள், 15 கார்களை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அனாதை வாகனங்கள்:
சாலையோரம் அனாதையாக கிடக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டனர். இதில் நகர் முழுவதும் சாலை யோரத்தில் அனாதையாக நின்ற 40 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இந்த வண்டிகள் யாருடையது என்று விசாரித்து வருகிறார்கள்.