அதிமுகவுக்கு நல்லகண்ணு பாராட்டு மழை... கூட்டணியில் இணைவது உறுதி?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் எப்போது நட்புறவு பாராட்டி வருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். அதிமுகவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முரண்பட்ட வகையிலும்கூட ஆதரவு தரக்கூடியவர். நேற்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ., ஜெயலலிதாவை 'நவீன அம்பேத்கர்' என்று தலையில் தூக்கி வைத்து பேசியிருக்கிறார். இந்நிலையில் நாகர்கோவிலில் மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவும் ஜெயலலிதா அரசுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது. இது தொடர்பாக வருகிற 26-ந்தேதி லண்டனில் நடை பெறும் காமன்வெல்த் மாநாடு ஆயத்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் இந்திய பிரதிநிதி, காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
அதிமுகவுக்கு அவ்ளோ பாராட்டு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை நாம் மீட்டு ஆக வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அ.தி.மு.க. ஆட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ராஜபக்சேயை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் இதற்கு ஒரு உதாரணமாகும். இது தவிர காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராட்டுகிறது.
அதே நேரம் சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வருகிற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இல்லாத அணிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்றார் அவர்.
ஆக லோக்சபா தேர்தல் கூட்டணி கன்பார்ம்!












Click it and Unblock the Notifications