ஜெ. அவதூறு வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்- கைது வாரண்ட் ரத்து!
கடந்த 2012ம் ஆண்டு பாளையங்கோட்டையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து நெல்லை மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்றத்தில் விஜய்காந்த் ஆஜரானார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த் நீதிபதி கலாவதி விசாரணையை ஜூன் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆப்சென்ட் ஆனதற்கு விளக்கம்:
முன்னதாக பிடிவாரண்ட் உத்தரவு குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
நீதிமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற எண்ணம் தேமுதிக தலைவருக்கு சிறிதும் கிடையாது. பல அவதூறு வழக்குகளில், பல நீதிமன்றங்களுக்கு அவர் நேரில் சென்று ஆஜரானதே இதற்கு சாட்சி. சட்டப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக முதலில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு, கடைசியாக பேச வேண்டும் என்ற பிரச்சனை காரணமாக உருவான அரசியல் சூழல் குறித்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜயகாந்த் இன்று முக்கிய ஆலோசனையில் இருந்த காரணத்தினால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டது.
மேலும் எங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இந்தக் காரணங்களை எடுத்துச் சொன்னார்கள். இருப்பினும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது சற்றும் எதிர்பாராத ஒன்று என்று கூறப்பட்டிருந்தது.