பெங்களூர் குண்டுவெடிப்பு: உண்மையான பைக் பரமத்திவேலூரில்!

தீவிரவாதிகள் குண்டு வைக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு எண் டி.என். 22 ஆர் 3769 ஆகும்.
இது சென்னை மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பதிவு எண் ஆகும். எனவே மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தமிழக க்யூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு போலீசார் மற்றும் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்தப் பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளை சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கரநாராயணனின் மகனான பெங்களூரில் வசிக்கும் சுந்தர் வாங்கி இருப்பது தெரிய வந்தது.
சாப்ட்வேர் என்ஜீனியரான சுந்தர் அமெரிக்கா சென்றதால் அந்த மோட்டார் சைக்கிளை சென்னையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு விற்றுள்ளார்.
இவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு மாற்றலாகிச் சென்றார்.
சிறிது காலம் கரூரில் அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வந்த அவர் கடந்த 2011ம் ஆண்டே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சேடர் தெருவைச் சேர்ந்த தனியார் கல்லூரி நூலக உதவியாளர் கோபிநாத்திடம் விற்றுள்ளார். இப்போது இவர் தான் இந்த பைக்கை பயன்படுத்தி வருகிறார்.
இதையடுத்து கோபிநாத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசை திசை திருப்ப இந்த போலி பதிவு எண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் ஜெயப்பிரகாஷ் தற்போது தேனி அல்லி நகரத்தில் உள்ள கிளையில் பணியாற்றி வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
குண்டு வைக்கப்பட்டிருந்த பைக் டிவிஎஸ் சுசூகி பைக் ஆகும். ஆனால், தமிழக பதிவு எண் கொண்ட பைக், யமாஹா ஆர்எக்ஸ் 135 பைக் ஆகும்.












Click it and Unblock the Notifications