அந்தரத்தில் அரை மணிநேரம் ஊஞ்சலாடிய 97 வயது பாட்டி
ரெய்னி: மாடி ஜன்னலில் இருந்து விழுந்த 97 வயது மூதாட்டி அதிசயமாக உயிர் பிழைத்தார்.
உக்ரைன் நாட்டில் எதிர்பாராத ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள ரெய்னி நகரில் ஏஞ்சலா என்ற 97 வயது மூதாட்டி அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஜன்னல் கதவை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெளியே தவறி விழுந்துவிட்டார்.
ஆனாலும் அவர் சுதாரித்துக்கொண்டு ஜன்னலுக்கு சற்று கீழ் அமைந்துள்ள ஏ.சி. எந்திரத்தை கெட்டியாக பிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கினார். அவருக்கும், தரைக்கும் இடைப்பட்ட தூரம் 30 அடி இருந்தது. இதை சாலையில் சென்ற வழிப்போக்கர் பார்த்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தார்.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏணியின் உதவி மூலம் ஏறி மூதாட்டியை பத்திரமாக மீட்டார்கள். அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததால் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
கிட்டத்தட்ட அவர் இந்த தள்ளாத வயதிலும் சுமார் 30 நிமிட நேரம் ஏ.சி. எந்திரத்திலேயே தொங்கி இருக்கிறார். தரையில் விழுந்திருந்தால் மண்டை சிதறியோ, கை-கால் எலும்பு முறிந்தோ உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நேர்ந்திருக்கும். எப்படியோ அதிர்ஷ்டவசமாக அவர் தப்பிவிட்டார்.












Click it and Unblock the Notifications