ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற தந்தை
ஹைதராபாத்: ஆந்திராவில் பிறந்து ஒரு மாதமேயான ஆண் குழந்தை ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கங்காதர். கூலித் தொழிலாளி. அவர் பிறந்து 1 மாதமே ஆன தனது ஆண் குழந்தையை லிங்கண்ணா என்பவர் மூலம் ரூ.1.5 லட்சத்திற்கு விற்றுவிட்டார் என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சேவைகள் அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை விற்கப்பட்டது உறுதியானது. போலீசார் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள தப்பா பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். அதை நிஜாமாபாத்தில் உள்ள சிஷ்க்ருஹா என்ற குழந்தைகள் நல காப்பகத்தில் விட்டுள்ளனர்.
குழந்தையின் தாயுடன் கங்காதருக்கு உறவு ஏற்பட்டுள்ளது. இதில் கர்ப்பமான அவரை முதலில் கருவை கலைக்க வைக்க முயன்றார் கங்காதர். ஆனால் லிங்கண்ணாவின் வலியுறுத்தலின்பேரில் அவர் குழந்தையை பெற்றெடுக்க அனுமதித்தார். ஒரு மாதத்திற்கு முன்பு நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அதை கங்காதர் லிங்கண்ணாவின் உதவியுடன் 10 நாட்களுக்கு முன்பு விற்றுவிட்டார். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.