சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகர் நாளை மதுரை புறப்படுகிறார்
அழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் தங்கப் பல்லக்கில் நாளை அழகர்கோவில் இருந்து மதுரை புறப்படுகிறார். 24ந் தேதி எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. மதுரைவிழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியமானது ஆகும்.
இந்த ஆண்டு விழா நேற்று தொடங்கியது. பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி கள்ளழகர் புறப்பாடானார். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து, கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார்.
24ந்தேதி எதிர்சேவை தொடர்ந்து கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்பட வழிநெடுக மண்டபங்களில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 24ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் மூன்று மாவடி பகுதியில் எதிர் சேவை நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு கள்ளழகரை வரவேற்பார்கள்.
அங்கிருந்து புறப்பட்டு புதூர், ரிசர்வ்லைன், அவுட் போஸ்ட், தல்லாகுளம் பகுதி மண்டபங்களிலும் அழகர் எழுந்தருள்வார். அன்று இரவு தல்லாகுளம் பெருமாள்கோவிலில் திருமஞ்சனம் நடைபெறும்.
பின்னர் இரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் ஏற்றுக்கொண்டு குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மூன்று மணிக்கு தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 25ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் 7.31 மணிக்குமேல் 7.45 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது லட்சக் கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு ராமராய மண்டபத்திற்கு செல்கிறார். அப்போது தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்குகிறார். 26ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் பிற்பகலில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.
27ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலையில் மோகனா வதாரத்தில் கள்ளழகர் காட்சி தருவார். அன்று பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் புறப்படுகிறார். அன்று இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடைபெறும்.
28ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கருப்பண சுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று கள்ளழகர் பூப்பல்லக்கில் வழிநடையாக திருமலையை நோக்கிச் செல்கிறார். அன்றிரவு அப்பன்திருப்பதியில் ஏராள மான பக்தர்கள் மண்டபங்களில் காத்திருந்து அழகரை தரிசனம் செய்வார்கள்.
29ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் கள்ளழகர், இருப்பிடம் சேருகிறார். 30ந் தேதி (செவ்வாய்கிழமை) உற்சவ சாந்தி மஞ்சள்நீர் சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications