அமெரிக்கா: சியாட்டில் நகர அபார்ட்மெண்டில் 4 பேரை சுட்டுக் கொன்ற மர்ம மனிதன்
நியூயார்க்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்ம நபரும் இறந்து கிடந்தான்.
தெற்கு சியாட்டிலில் பெடரல் வே பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது பார்க்கிங் பகுதியில் இருவர் படுகாயத்துடன் கிடந்தனர். அதில் ஒரு நபர் துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட முயன்றபோது போலீசார் சுட்டதில் அவன் இறந்தான்.
இந்த நபர் தான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று பின்னர் தெரியவந்தது. இவனது தாக்குதலில் 1 பெண் உள்பட 4 பேர் பலியாகிக் கிடந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவன் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. அவன் யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.