குற்றவியல் சட்டத்திருத்த பரிந்துரைகள் செய்த வர்மா குழு தலைவர் நீதிபதி வர்மா மறைவு

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை குர்காவ்னில் உள்ள மெதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் துவங்கியது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.30 மணிக்கு உயிர் இழந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா கடந்த 1933ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி மத்திய பிரதேசத்தில் பிறந்தார். சட்டம் பயின்ற அவர் 1955ம் ஆண்டில் வழக்கறிஞரானார். அதன் பிறகு 1973ம் ஆண்டு அவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனார். 1986ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவர் 1986ல் இருந்து 1989ம் ஆண்டில் சில மாதங்கள் வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். 1989ல் அவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1997ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி வர்மா உச்ச நீதிமன்றத்தின் 27வது தலைமை நீதிபதியானார். அவர் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இது தவிர அவர் மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1994ம் ஆண்டு கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்த 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் வர்மாவும் இடம்பெற்றிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியானார். இதையடுத்து பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக நாட்டிலுள்ள குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைக்க முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழு ஆய்வு நடத்தி பல்வேறு பரிந்துரைகள் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications