சென்னை புதிய விமான நிலைய ரன்வே பாலத்தில் விரிசல்… கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விரிவாக்கப்பட்டுள்ள இரண்டாவது ஓடுதளம் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அடையாற்றின் மேல் செல்லும் இந்த ஓடுதளத்தில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் போதிய வலுவானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு இரண்டாவது ஓடுதளத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
அடையாற்றின் மீது சுமார் 230 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் பல இடங்களில் வெடிப்புகளும், கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகிறது.
சமீபத்தில் நடந்த பொதுமக்கள் கலந்தாய்வுக்கூட்டத்தில் பேசிய சென்னை விமான நிலைய இயக்குனர் சுரேஷ், இரண்டாவது ஓடுதளத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் மிகவும் உறுதியானது என்றும், எனவே பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.
உரிய திட்டமிடல், பாதுகாப்பு விதிகளை பின்பற்றித்தான் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. வடிவம், பாதுகாப்பு குறித்து சென்னை ஐஐடியிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பாலம் இயக்குவதற்கான வகையில் பாதுகாப்பாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்த ஓடுதளத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது ஆபத்தானது என்று ஓய்வு பெற்ற விமானியும், விமான பாதுகாப்பு நிபுணருமான ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பயணிகள் இறங்கியபிறகு விமானங்களை மற்ற பகுதிக்கு மாற்றுவதற்கு மட்டும்தான் திட்டமிட்டு இந்தப் பாலம் கட்டப்பட்டதாகவும் எனவே விமானம் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் இந்த பாலம் என்றும் நிபுணர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ஓடுதளம் பாதுகாப்பானது என்று விமானத்துறையின் தலைமை இயக்குனரகத்தினரால் இன்னும் சான்றளிக்கப்படவில்லை. இதனால், விபத்தை தவிர்க்க இரண்டாவது ஓடுதளத்தின் பாதுகாப்பை விமானத்துறை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இன்னமும் முழு பயன்பாட்டிற்கு வராத சென்னை விமானநிலையம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.