சாலையோரம் கிடந்த மூட்டையில் வெடிகுண்டா?- நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே சாலையோரம் கிடந்த மூட்டையில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள மேலப்பிள்ளையார்குளம் விலக்கில் சாலையோரத்தில 35 சாக்கு மூடைகள் கேட்பாரற்று கிடந்தன. வெகுநேரமாக மூட்டைகள் அந்த இடத்திலேயே கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏறப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாழையூத்து டிஎஸ்பி நடராஜன் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போலீசார் மூட்டைகள் அருகே யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து விட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து மூட்டைகளை பரிசோதித்ததில் அவைகளில் வெடிகுண்டு இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மூட்டைகள் பிரித்து பார்த்ததில் அவைகளில் வெள்ளை நிற பவுடர் இருப்பது தெரிந்தது. அவைகளை பரிசோதித்து பார்த்ததில் அது போலி சிமிண்ட் என தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போலி சிமிண்ட் என்பதால் அவற்றை சாலையோரத்தில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications