தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்க புதிய மின் திட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110ன் கீழ் இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், இளைய சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைவதற்கும் முக்கிய காரணியாக விளங்குவது மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் கொண்டு, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மீண்டும் மாற்றிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், மின் உற்பத்தியை பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடர மைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் ஆகிய பணிகளை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
எனது அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்குள் 606.5 மெகாவாட் அளவுக்கான மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, மேட்டூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாவது நிலையின் முதல் யூனிட் மற்றும் வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் இரண்டாவது யூனிட் ஆகியவை முழு உற்பத்தி திறனை எட்டும் நிலையில் உள்ளன.
செயல்பாட்டுக்கு வரும் வட சென்னை, வல்லூர், தூத்துக்குடி மின் திட்டங்கள்:
வட சென்னை அனல் மின் திட்டத்தின் அடுத்த யூனிட் மே மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது. வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் மூன்றாவது யூனிட் அக்டோபர் மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது. தூத்துக்குடி கூட்டு மின் திட்டத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட இரு யூனிட்கள் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உற்பத்தியை தொடங்க உள்ளன.
இது மட்டுமல்லாமல், நான் ஏற்கெனவே அறிவித்தபடி 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கத் திட்டம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. 2 x 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மையத் திட்டம் மற்றும் 2 x 660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications