தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, எம்.ஆர்.நகர், பாரதி நகர், தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் சுற்றுப்புறங்களிலும் நேற்று காலை 9 மணி முதல் 10 மணிவரை சுமார் 1 மணிநேரம் லேசானது முதல் பலத்த மழை பெய்தது.
மேலும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 7 செ.மீ. மழையும், பொள்ளாச்சியில் 4 செ.மீ., கரூர், தளி, பாண்டவராயர் தலையில் தலா 3 செ.மீ., தாளவாடியில் 2 செ.மீ, ஆம்பூர், நன்னிலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஊட்டி, தேவாலாவில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.