“வெள்ளை பவுடர்.. கைதேர்ந்தவர் அமைச்சர் சரத்!” - கமிஷனர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் புகார்!
சென்னை: வெள்ளை பவுடரை அமைச்சர் சரத் ஒழுங்குபடுத்தும் விதம், போதை பொருள் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர் போல் உள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் சரண்யா புகார் மனு அளித்திருக்கிறார்.
ஏற்கெனவே அமைச்சர் சரத் மீது, சரமாரியாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில், பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரச்சனை என்ன?
ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் சரத், மொபைலில் கொட்டப்பட்டிருந்த வெள்ளை நிற பவுடரை ஏடிஎம் கார்டை கொண்டு ஒழுங்குப்படுத்தும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வந்தது. இதையடுத்து அமைச்சர், போதை பவுடரைதான் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு பக்கம் முதலமைச்சர் விஜய் போதைக்கு எதிராக மாரத்தான் ஓடிக்கொண்டிருக்கையில் மறுபுறம், அமைச்சர் சரத் போதை பொருளை பயன்படுத்தி வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
திமுக ஆர்ப்பாட்டம்
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சரத் விளக்கமளித்திருந்தார். குழந்தைக்கு மாத்திரையை பவுடர் செய்து கொடுத்த வீடியோ அது என்று கூறியிருந்தார். ஆனால், மொபைலில் வைத்து மாத்திரையை பவுடர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்விகள் எழுந்தன. எனவே அமைச்சரை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அல்லது, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இப்படி இருக்கையில் சரத் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
புகார் மனு
இந்நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மனுவில், வெள்ளை பவுடரை அமைச்சர் சரத் ஒழுங்குபடுத்தும் விதம், போதை பொருள் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர் போல் உள்ளது என்றும், குழந்தைக்கு மாத்திரையை பவுடர் செய்யும் வீடியோவை ஏன் இன்ஸ்டா ஸ்டோரியாக வைக்க வேண்டும் என்றும்? வழக்கறிஞர் சரண்யா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சட்ட சிக்கல்
அதேபோல மாத்திரையை ஒழுங்குபடுத்தும்போது அதை வெளியிலிருந்து யாரும் பார்த்துவிடாமல் இருக்க ரூ.500 நோட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்த புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது கேள்வியாக இருக்கிறது. ஏற்கெனவே திமுகவினர் இந்த பிரச்சனையை சீரியஸாக கையில் எடுத்திருக்கின்றனர். அப்படி இருக்கையில், அமைச்சருக்கு சட்ட சிக்கலை இந்த மனு ஏற்படுதும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications