விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா? ரசிகர்கள் என்ன இப்படி சொல்லுறாங்க?
சென்னை: தமிழக அரசியலில் நடிகர் விஜய் வெற்றி பெற்ற பிறகு, சினிமா உலகில் இன்னொரு புதிய விவாதம் சூடுபிடித்துள்ளது. "அடுத்ததாக எந்த நடிகர் அரசியலுக்கு வரப்போகிறார்?" என்ற கேள்விதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலருக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற விஜய், பல நடிகர்களின் ரசிகர்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். அந்த வெற்றிக்குப் பிறகே, பல முன்னணி நடிகர்களின் பெயர்களும் அரசியல் விவாதங்களில் அடிக்கடி இடம் பெறத் தொடங்கியுள்ளன.

சூர்யா ரசிகர்களின் ஆசை
அந்த வரிசையில் தற்போது அதிகமாக பேசப்படும் பெயர் நடிகர் சூர்யா. சினிமாவில் மட்டுமல்லாமல், அகரம் அறக்கட்டளை மூலம் பல ஆண்டுகளாக கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் சூர்யா, சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகராக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். சமீபத்தில் அகரம் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நடைபெற்றபோதும், "இப்படிப்பட்ட சேவையை செய்கிறவர் அரசியலுக்கு வந்தால் நல்லது" என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலானது.
இதற்கிடையே, "விஜய்க்கு அடுத்ததாக சூர்யாவும் அரசியலுக்கு வரலாம்" என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதற்கு சூர்யா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த விவாதம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர்களின் அரசியல் கனவு
சூர்யா மட்டுமல்ல, விஜயின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் கூட, "நானும் அரசியலுக்கு வரப்போகிறேன்" என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அதேபோல், ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கஸ்தூரி ராஜா, "நாளைக்கு என்னுடைய மகனோ, பேரனோ கூட அரசியலுக்கு வரலாம்" என்று கூறியிருந்தது அப்போது பெரும் பேசுபொருளானது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர். "விஜய் வெற்றி பெற்றதால் ரசிகர்களுக்கே தங்களுடைய நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதா? இல்லை நடிகர்களுக்குள்ளேயே அரசியல் மீது புதிய ஆர்வம் உருவாகிவிட்டதா?" என்பதுதான் அந்த கேள்வி.
ரசிகர்கள் கருத்து
ஒருபுறம், "சமூக சேவை செய்பவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது" என்று சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மற்றொருபுறம், "சினிமாவில் வெற்றி பெற்றாலே அரசியலிலும் வெற்றி கிடைக்கும் என்று நினைப்பது சரியல்ல. மக்களுக்காக நீண்டகால சேவை செய்தால்தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும்" என்ற கருத்துகளும் பதிவாகி வருகின்றன.
இதனால், தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் தலைப்பு "விஜய்க்கு பிறகு அடுத்த அரசியல் ஹீரோ யார்?" என்பதாகவே மாறியுள்ளது. அந்த பட்டியலில் சூர்யாவின் பெயர் இடம்பிடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பா, அல்லது எதிர்கால அரசியல் நகர்வுக்கான முன்னோட்டமா என்பது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.













Click it and Unblock the Notifications