மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு.. வெளியான அதிரடி அறிவிப்பு
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக்குக்கு இணையாக மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்படும் மதுபான உரிமத்துக்கான சிறப்புக் கட்டணத்தை இரட்டிப்பாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் மனமகிழ் மன்றங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதன் மூலம் மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் அதிகளவு மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதற்கு இணையான மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டன. மனமகிழ் மன்றங்களில் தங்களது உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க அனுமதியுள்ளது. அனுமதியை மீறி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் நடந்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.

மனமகிழ் மன்றங்கள் கட்டணம்
மனமகிழ் மன்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்குதுறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மனமகிழ் மன்றம் உரிமத்தை புதுப்பிப்பதற்கும், ஆண்டுதோறும் தொடர்வதற்கும் அரசுக்கு சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அரசாணையின்படி, சிறப்புக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சென்னை மனமகிழ் மன்றங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.10,000, உரிமத்திற்கு ரூ.30,000, சிறப்பு கட்டணம் ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மனமகிழ் மன்றங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.10,000, உரிமத்திற்கு ரூ.30,000, சிறப்பு கட்டணம் ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மனமகிழ் மன்றங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.10,000, உரிமத்திற்கு ரூ.30,000, சிறப்பு கட்டணம் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருவாய் உயரும்
நகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.10,000, உரிமத்திற்கு ரூ.30,000, சிறப்பு கட்டணம் ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மனமகிழ் மன்றங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.10,000, உரிமத்திற்கு ரூ.30,000, சிறப்பு கட்டணம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருவாய் உயர்த்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications