“மரணத்தை பார்த்து பயம் கிடையாது.. வங்கதேசத்துக்கு கண்டிப்பா போவேன்!” ஷேக் ஹசீனா கொடுத்த அப்டேட்
டெல்லி: வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில், செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு வங்கதேசத்திற்கு போக உள்ளதாகவும், இதனால் ஏற்படும் விளைவுகள் மரணமாக இருந்தால் கூட அதற்கு பயப்பட மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த 1975ல் எனது அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் என அனைவரையும் நான் இழந்தேன். என் மீது பலமுறை வெடிகுண்டு மற்றும் கிரனேடு தாக்குதல் நடந்திருக்கிறது. நான் மரணத்தை பார்த்து பயப்படுபவர் அல்ல. மக்களின் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் விடுதலை போரின் வீரத்தை மீட்டு எடுக்கவும் நான் எனது சொந்த நாட்டுக்கு போக இருக்கிறேன்.

அனைத்து சதிகளையும், தடைகளையும் உடைத்து.. இந்த ஆண்டு நான் வங்கதேசம் செல்கிறேன். எனக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனையை கொடுத்திருக்கிறது. இந்த தீர்ப்பு முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது. வெளிப்படையாகவே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிகிறது. எனது அவாமி லீக் கட்சியை தலைவர் இல்லாத கட்சியாக மாற்ற, நீதிமன்றத்தை தற்போதைய அரசு கருவியாக பயன்படுத்தியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், தனது எதிர்காலத் திட்டம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். மீண்டும் வங்கதேசத்திற்குச் செல்வது குறித்த ஹசீனா இப்போதுதான் முதல் முறையாக பேசியிருக்கிறார்.
வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தனது ஆதரவாளர்களைச் சந்திக்கவும், அரசியல் பணிகளைத் தொடரவும் அவர் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. ஹசீனாவின் இந்த அறிவிப்பு வங்கதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications