எடப்பாடி பழனிசாமி படம் இல்லை.. எஸ்.பி.வேலுமணியின் மீட்டிங்கை கவனிச்சிங்களா! புது பிளான்!
கோயம்புத்தூர்: எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகியிருந்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஆனால் கொஞ்ச நாட்களிலே மீண்டும் சேர்ந்துக்கொண்டார். இப்படி இருக்கையில் கோவையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் நடத்திய ஆலோசனை.. அதிமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமியின் படம் இடம் பெறாதது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
தேர்தலுக்கு பிறகு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய விஷயத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, 25 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் தவெகவக்கு ஆதரவாக கையை தூக்கியிருந்தார்கள். இதற்கு பின்னால் எஸ்.பி.வேலுமணியின் திட்டம் இருந்தது.

அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி
கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்காத எடப்பாடி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் சபாநாயகருக்கு கடிதம் கொடுக்க.. பின்னர் எஸ்.பி.வேலுமணி சமாதானம் ஆகி உள்ளே வந்தார். இதையடுத்து கடிதம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் எஸ்.பி.வேலுமணிக்கு முன்னர் கொடுக்கப்டப்டடிருந்த பழைய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
எடப்பாடிக்குதான் மரியாதை
இப்படி இருக்கையில்தான் நேற்று வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த ஆலோசனையில், "கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நம்முடன் இணைந்திருந்தால் ரிசல்ட் வேறு மாதிரி வந்திருக்கும். இப்போது வரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குதான் மரியாதை கொடுத்து வருகிறோம். இருப்பினும் தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் அதிருப்தி கிளம்பியது.
வேலுமணி பேசியது என்ன?
அதிமுக உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? திமுக எதிர்ப்புதான். அதற்காகத்தான் எம்ஜிஆர் இந்த கட்சியை உருவாக்கினார். ஆனால், திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது என்கிற நிலைப்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த பின்னணியில்தான் 47 எம்எல்ஏக்களில் 25 பேர் எங்கள் பின்னாடி வந்தார்கள். நாங்கள் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று யோசித்தோம். திமுகவுடன் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 30 மாவட்ட செயலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பொறுப்பு வழங்கப்படவில்லை
நான் 21 வருடங்களாக கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்து இருக்கிறேன். கட்சியில் சாதாரண உறுப்பினராக இருப்பேன். தப்பு பண்ணினால் கண்டிப்பாக கேட்போம். பழைய பதவியை கேட்டோம். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கேட்டோம். எதுவும் நடக்கவில்லை. செங்கோட்டையன் போனார்.. அதற்கு அப்புறம் ஜே.சி.டி.பிரபாகரன் போனார். அப்படி நாங்களும் போவோம் என்று நினைக்கிறார்கள். கட்சி தோற்றுக்கொண்டே வந்தால் என்ன செய்வது? ஆனால், திமுகவுடன் கூட்டணி என்று சொல்கிறவர்கள் இப்போதே கிளம்பிவிடுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுவே என்னுடைய முடிவு" என்று பேசியிருக்கிறார்.
கழன்றுக்கொள்ள திட்டம்?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே இருந்தன. எடப்பாடி பழனிசாமியின் படம் இடம்பெறிவில்லை. அப்படியெனில் அதிமுகவிலிருந்து கழன்றுக்கொள்ள எஸ்.பி.வேலுமணி திட்டமிட்டிருக்கிறாரா? என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications