சாந்தணு உடைத்த கண்ணாடி டீப்பாய்.. கோயம்புத்தூரில் பாக்யராஜ் பேசிய கடைசி போன் கால் இவருக்கு தானா?
சென்னை: கலைஞருக்கு பிறகு எப்போதும் கையில் பேட், பேப்பர், பேனா ஆகியவற்றைத் தாங்கி, அதிகமாக எழுதிய ஒரே கதாசிரியர் பாக்யராஜ் சார் தான். எப்பொழுது சென்றாலும் தலை குனிந்து எழுதிக்கொண்டேதான் இருப்பார். அவருக்கு மியூசிக், கேரம் போர்டு, புத்தக வாசிப்பு ஆகியவற்றின் மீது அடங்காத காதல் இருந்தது" என்று கவிஞர் பா.விஜய் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
rednool என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பா.விஜய், "என்னைத் திரையுலகில் பெற்றெடுத்த என்னுடைய இரண்டாவது தாய், எனக்கு முகவரி தந்த என் குரு பாக்யராஜ் சார் தான். நான் 19வது வயதில் கோபிசெட்டிபாளையத்தில் 'ராசுகுட்டி' ஷூட்டிங்கின்போது அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அவரிடம் இருந்த ஆளுமை, அன்பு மற்றும் பக்குவம் என்னை வியக்க வைத்தன.

நான் எழுதிய கவிதைகளைக் கொண்டு போய் அவரிடம் தந்தேன். அதை அவர் உற்று கவனித்து, எழுத்துக்களைக் கூட்டி மிகவும் நிதானமாகப் படித்தார். படித்துவிட்டு, 'உன்னிடம் திறமை இருக்கிறது, இன்னும் பயிற்சி செய்தால் கண்டிப்பாக முன்னுக்கு வரலாம், என்னுடன் சென்னைக்கு வந்துவிடுகிறாயா?' என்று முதல் சந்திப்பிலேயே கேட்டார்.
அவர் என்னைச் சென்னைக்கு அழைப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சென்னைக்கு அழைத்ததோடு மட்டுமன்றி, என்னை அவருடைய வீட்டிலேயே தங்க வைத்துத் தன் குடும்ப உறுப்பினரைப் போல அரவணைத்தார்.
வழிநடத்திய ஆசான் பாக்யராஜ்
கடந்த 33 வருடங்களுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தில் நடந்த அத்தனை முக்கிய நிகழ்வுகளிலும் அவர் கூடவே இருந்திருக்கிறார். என் குழந்தைகள் பிறந்தது, குழந்தைகளுடைய பிறந்தநாட்கள், வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, என் பெற்றோருக்கு நடைபெற்ற 60ம் கல்யாணம் என எல்லாவற்றிலும் ஒரு குடும்ப உறுப்பினர் எப்படி முன்னின்று நடத்துவாரோ, அப்படியேயும் எங்களை வளர்த்தெடுத்தார்.
கலைஞருக்கு பிறகு எப்போதும் கையில் பேட், பேப்பர், பேனா ஆகியவற்றைத் தாங்கி, அதிகமாக எழுதிய ஒரே கதாசிரியர் பாக்யராஜ் சார் தான். எப்பொழுது சென்றாலும் தலை குனிந்து எழுதிக்கொண்டேதான் இருப்பார். அவருக்கு மியூசிக், கேரம் போர்டு, புத்தக வாசிப்பு ஆகியவற்றின் மீது அடங்காத காதல் இருந்தது.
நான் 'ஆருத்ரா' படத்தின் மூலம் டைரக்டராகவும் நடிகராகவும் மாறியபோது, "இதனால் பாடல் எழுதும் வாய்ப்பு பறிபோய்விடுமோ" என்று ஒரு தாயின் உள்ளத்தோடு கவலைப்பட்டார்.
தன்னம்பிக்கைவாதி
"எந்த புது படத்தின் அறிவிப்பு வந்தாலும் அதில் பாடல் ஆசிரியர் இடத்தில் உன் பெயர் இருக்கிறதா என்றுதான் முதல்ல பார்ப்பேன், உன் பெயர் இருந்தால் நிம்மதி அடைவேன்; பாடல் எழுதுவதை மட்டும் எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதே" என்று அக்கறையோடு அறிவுறுத்தினார். என் திரையுலக வாழ்க்கையில் ஏதாவது ஒரு சோர்வோ அல்லது வெறுமையோ ஏற்படும் போது, 'நமக்கு பின்னால் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார்' என்ற தார்மீக ஆதரவாக அவர்தான் திகழ்ந்தார்.
அனைத்துத் துயரங்களையும் பொருளாதார இழப்புகளையும் கடந்து, 'இந்தக் கதை இந்த காலகட்டத்து மக்களின் ரசனைக்கு பொருந்தவில்லை" என்று தோல்விகளை சாதாரணமாகக் கடந்து சென்ற மாபெரும் தன்னம்பிக்கைவாதி அவர். உலகத் படங்களை ஒரு பிரேம் கூட நகராமல் உற்றுப் பார்த்து தன்னுடைய மனதில் ஒரு பெரிய நூலகத்தையே வைத்திருந்தார்.
ஐஸ் பெட்டிக்குள் குருநாதர்
எல்லாவற்றையும் விட ஒரு பேரிடியாக அமைந்த சம்பவம், முன்தினம் நான் கோயம்புத்தூர் சென்று விமானத்தில் இறங்கியபோது, நைட் 10 மணிக்குப் பாக்யராஜ் சாரிடம் இருந்து போன் வந்தது. "எங்கே இருக்கிறேப்பா?" என்று கேட்டார்.
"நான் கோயம்புத்தூர் வந்திருக்கிறேன் அண்ணா" என்றேன். "ஐயோ கோயம்புத்தூர் போய்ட்டியா சரி, நாளைக்கு சாயங்காலம் வா. உனக்கு ஒரு புது பொறுப்பை எடுத்து வைத்திருக்கிறேன், அதை உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என்றார். மறுநாள் மாலை நான் சென்னை திரும்பிச் சென்று பார்த்தபோது, அவர் ஐஸ் பெட்டிக்குள் கிடந்ததை பார்த்து கதறிவிட்டேன்..
பாக்யராஜ் நிறைவேறாத ஆசை
பாக்யராஜ் சாருக்கு ஒரு சின்ன வருத்தமோ அல்லது வலியோ இருந்ததென்றால், அது தன் மகன் சாந்தனுவை ஒரு பெரிய ஹீரோவாக்க வேண்டும், அவர் மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதுதான். என்னைப்பொறுத்தவரை சாந்தனு மிகவும் திறமையான, பக்குவப்பட்ட, நல்ல பண்புகள் கொண்ட ஒரு அருமையான தம்பி.
நான் முதன்முதலில் பாக்யராஜ் அவர்களின் வீட்டில் சேர்ந்த 3லவது நாளிலேயே சாந்தனுவின் சிறுவயது குறும்பை நேரில் பார்த்திருக்கிறேன்.
கண்ணாடி உடைத்த சாந்தனு
அப்போது ரொம்பவும் சின்ன பையன். திடீரென்று வீட்டின் மாடியில் பயங்கர சத்தம் கேட்டது. நாங்கள் எல்லாரும் பதறியடித்துக்கொண்டு ஓடிப் போய்ப் பார்த்தோம். அங்கு சோபாவிலிருந்து, அருகில் இருந்த ஒரு பெரிய கண்ணாடி டீப்பாய் மீது சாந்தனு குதித்து அதை உடைத்திருந்தார். நல்ல வேளையாக அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு அவர் சின்ன வயதில் துடுக்குத்தனம், குறும்புத்தனமுடன் இருந்தார்.
அதற்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து சாந்தனு கதாநாயகனாக நடித்த 'சக்கரக்கட்டி' திரைப்படத்தில் நான் பாடல் எழுதினேன். ஆனால் அப்போதுமுற்றிலும் மாறி, மிகவும் மெச்சூர்டான, பக்குவப்பட்ட ஒரு இளைஞராக நின்றதைக் கண்டு நான் வியந்து போனேன்.
சிம்பிளிசிட்டி பாக்யராஜ்
அதேபோல், பாக்யராஜ் சார் தன் வாழ்க்கையில் ஆடம்பரங்களுக்கோ, ஆசைகளுக்கோ முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை; எதற்காகவும் பேராசைப்பட்டதும் இல்லை. உடைகள் விஷயத்தில் கூட அவருக்கு என்று தனிப்பட்ட தேர்வுகள் கிடையாது. பூர்ணிமா அக்காவும், அவருடைய உதவியாளர் முருகனும் தான் டிரஸ், ஷூ, பர்ஃபியூம் செலக்ட செய்து தருவார்கள். .
திரையுலகில் 'இயக்குநர்' என்ற கம்பீரமான வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் என் மனக்கண்ணில் வந்து நிற்கும் ஒரே முகம், கண்ணாடி அணிந்த, நெற்றியில் திருநீறு தரித்த என் குரு பாக்யராஜ் அவர்களின் முகம் மட்டும்தான்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications