பாக்யராஜ் மறைவுக்கு பிறகு.. சாந்தனு ஒரே வார்த்தையில் வெளியிட்ட பதிவு.. வருத்தத்தை பகிர்ந்த பிரபலங்கள்
சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு மரியாதையுடன் நேற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், குடும்பத்தினர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக மகன் சாந்தனு, இறுதி ஊர்வலத்தில் தந்தையின் உடலை கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் பலரது கண்களையும் கலங்க வைத்தன. தந்தையை வழியனுப்பிய சில மணி நேரங்களிலேயே அவர் வெளியிட்ட ஒரு சமூக வலைதள பதிவு தற்போது ஆயிரக்கணக்கானோரின் இதயத்தை உருக்கி வருகிறது.

ஒரு வரியில் உடைந்த மகன்
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாக்யராஜின் 50 ஆண்டு சினிமா பயண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த சாந்தனு, அதற்கு மேல் எந்த நீண்ட பதிவும் எழுதவில்லை.
"Only If I Could... Appa" என்ற ஒரே வரியுடன் உடைந்த இதய எமோஜியை மட்டும் பதிவிட்டிருந்தார்.
அந்த ஒரு வரியே, தந்தையை இழந்த மகனின் வலியை வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளது.
கலங்க வைக்கும் நினைவு
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாக்யராஜின் 50 ஆண்டு சினிமா பயண விழாவில், பல முன்னணி பிரபலங்கள் அவரை பாராட்டி பேசினர். அப்போது மேடையேறிய சாந்தனு, மகனாக அல்ல... ஒரு ரசிகனாக பேசுவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.
அவர் பேசும்போது, "நான் இங்கே என்னுடைய அப்பாவுடைய மகனாக வரவில்லை. அவருடைய மிகப்பெரிய ரசிகனாக வந்திருக்கிறேன். கடவுள் இப்போ என்னிடம் வந்து, 'என்ன வேண்டும்?' என்று கேட்டால், என்னுடைய ஆயுளில் இருந்து பத்து வருடத்தை எடுத்து என் அப்பாவுக்கு கொடுத்திடுங்கள் என்று தான் கேட்பேன்" என்று உணர்ச்சியுடன் கூறினார்.
அந்த வார்த்தைகளை கேட்டதும் அருகில் அமர்ந்திருந்த பாக்யராஜ் உடனே, "என்னடா... அப்படி எல்லாம் பேசாதே" என்பது போல முகம் சுழித்து சிரித்தபடி சாந்தனுவை நிறுத்த முயன்றார்.
அதன்பிறகு தனது பேச்சை தொடர்ந்த சாந்தனு, "என்னுடைய அப்பா இன்னும் குறைந்தது பத்து வருடங்களாவது நல்ல படங்களை இயக்க வேண்டும்... நிறைய படங்களில் நடிக்க வேண்டும்... அதுதான் ஒரு ரசிகனாக என்னுடைய ஆசை" என்று கூறியிருந்தார். அந்த மேடைப் பேச்சு அப்போது அனைவரையும் நெகிழ வைத்திருந்தாலும், இன்று அந்த வார்த்தைகளே வேதனையான நினைவாக மாறியுள்ளன.
உருகும் ரசிகர்கள்
தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சாந்தனுவின் சமீபத்திய பதிவை பார்த்த ரசிகர்கள், "அன்று அப்பாவுக்காக 10 வருடம் ஆயுள் வேண்டும் என்று கேட்ட மகன்... இன்று 'Only If I Could' என்று கதறுகிறான்...", "இந்த வீடியோவை இப்போது பார்க்கவே முடியவில்லை...",
"பாக்யராஜ் சார் அந்த நாள் மகன் சொன்ன வார்த்தையை கேட்டு சிரித்தார்... இன்று அதே வார்த்தை அனைவரையும் அழ வைக்கிறது" என்று ஆயிரக்கணக்கான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு தந்தையின் மீது மகன் வைத்திருந்த அளவில்லா பாசத்தையும், ஒரு மகனின் கனவு இவ்வளவு சீக்கிரம் நொறுங்கி போய்விட்ட வேதனையையும் சாந்தனுவின் இந்த ஒரு பதிவு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது. சாந்தனுவின் பதிவை பார்த்த பல பிரபலங்கள், சினிமா நடிகர்கள் நடிகைகள் அனைவருமே சாந்தனுவுக்கு ஆறுதல் கூறி தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications