ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு: மே 1 முதல் அமல்
முன்பெல்லாம் ரெயில் பயணிகள் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெல்வே வழங்கி வந்தது. தற்போது அதனை 2 மாதமாக, அதாவது 60 நாட்களாக குறைத்திருக்கிறது.
இதுதொடர்பாக ரெல்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாளாக (பயண நாள் தவிர) குறைக்கப்படுகிறது. இந்த நடைமுறை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 30-ம் தேதி வரையிலான முன்பதிவுக்கு பழைய முறையே நீடிக்கும்.
டிக்கெட்டுகளை மொத்தமாக பதுக்கி, பிளாக்கில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையான பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். எனினும், 60 நாட்களைத் தாண்டி முன்பதிவு செய்திருந்த பயணிகள், அவற்றை ரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முன்பதிவு காலம் 360 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.