பட்டுக்கோட்டை: பிரேக் பிடிக்காத அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி; 4 பேர் காயம்
பட்டுக்கோட்டை: பட்டுக் கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் லோடு ஆட்டோ மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து புக்கோட்டைக்கு சென்ற அரசு பஸ் ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் திருச்சிற்றம்பலம் - ஆவணம் சாலையில் கலாம் பாலிடெக்னிக் பகுதியில் சென்று கொண்டிருந்து. அப்போது முன்னால் 3 மாட்டு வண்டிகள் சென்றது. இதனை கடந்து செல்ல பஸ் டிரைவர் முயன்றார். அந்த சமயத்தில் எதிரே புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு லோடு ஆட்டோ வந்தது.
திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாட்டு வண்டிகள் மீது மோதியது. இதில் 2 மாடுகளும் இறந்தது.
அதன்பின்னரும் கட்டுக்குள் வராமல் எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த திருமூர்த்தி (20) பரிதாபமாக இறந்தார்.
மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற செருவாவிடுதியை சேர்ந்த சிதம்பரம், துரை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதேபோல் லோடு ஆட்டோவில் பயணம் செய்த புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்த சோமசுந்தரம் பலத்த காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பேராவூரணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த லோடு ஆட்டோ டிரைவர் திருமூர்த்தி உடலை மீட்டனர்.
விபத்து ஏற்பட்டதும் பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.