மக்களே.. உங்கள் தீர்ப்பை நிராகரித்து துரோகம் செய்துவிட்டது பாஜக: கர்நாடக பிரசாரத்தில் சோனியா
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டிட்யிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல் கட்டமாக இன்று தேர்தல் பிரசாரத்தை சிக்மகளூரில் தொடங்கினார். அங்கு அவர் பேசுகையில், இந்த மாநிலத்து மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்... அவர்கள் உடனேயே ஒரு மாற்றம் தேவை என கருதுகின்றனர். நீங்கள் அளித்த தீர்ப்பை பாஜக முற்றாக நிராகரித்துவிட்டது. கர்நாடக மக்களின் தீர்ப்புக்கு துரோகம் இழைத்துவிட்டது பாஜக. இந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உட்பட அனைத்து நிலைகளும் முடங்கிப் போயிருக்கின்றன.
சுரங்க மாஃபியாக்கள் ஒட்டுமொத்த சுற்றுச் சூழலையே அழித்துவிட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தொழில்துறையினர் வெளியேறி வருகின்றனர். காரணம் ஊழல்தான். கர்நாடக மாநிலத்தில் நிலையான அரசாங்கமே தேவை. கர்நாடகத்துக்கு இப்போதைய அவசிய தேவை நிலையான அரசுதான். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் கர்நாடகாவை நாட்டின் ஒளிமயமான மாநிலமாக்குவதை முதன்மைப் பணியாக மேற்கொள்ளும் என்றார் அவர்.