தர்மபுரி: 15 வருடம் முன் முடிவு செய்த பெண்ணைத் தேடி வந்த ஆந்திர வியாபாரி சுட்டுக் கொலை
தர்மபுரி: 15 வருடங்களுக்கு முன் திருமணம் செய்ய முடிவு செய்த பெண்ணைத்தேடி வந்தபோது பெண்ணின் பெற்றோரால் ஆந்திர சிப்ஸ் வியாபாரி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கண்ணன் (வயது 25). இவர் ஆந்திராவில் சிப்ஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்..
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மாது என்பவரின் மகளுக்கும் திருமணம் செய்ய இளவயதில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மாதுவின் மகள் பெரிய பெண் ஆன பிறகு அவரை கண்ணனுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்து விட்டனர் அவரது பெற்றோர்..
இது பற்றி தெரிய வந்ததும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கண்ணன் ஆந்திராவில் இருந்து சிகரல அள்ளி கிராமத்திற்கு வந்துள்ளார். இது பற்றி மாதுவிடம் கேட்டபோது. அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 19-ந் தேதி முதல் கண்ணனை காணவில்லை.
பின்னர் கண்ணன் குறித்த தகவல் எதுவும் கிடைக்கப்பெறாததால், கண்ணனின் பெற்றோர் கடந்த 26-ந் தேதி ஏரியூர் போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் தங்களது தேடுதல் பயணத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் கருப்பண்ணன் (வயது 37) என்ற வாலிபர் ஏரியூர் போலீசில் சரண் அடைந்தார். அப்போது அந்த வாலிபர் கண்ணனை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாக கூறினார்.
அவரிடம் ஏரியூர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பெண்ணின் தந்தை மாது மற்றும் அவரது உறவினர் பவுனேசன் ஆகியோர் ரூ 50 ஆயிரம் கொடுத்து கண்ணனை கொலை செய்யச் சொன்னதை அவர் வாக்குமூலமாக கொடுத்து உள்ளார்.
கண்ணன் பெண் கேட்டு மாதுவிடம் அடிக்கடி தகராறு செய்ததால், ஆத்திரம் அடைந்த அவரும், அவரது உறவினரான பவுனேசன் என்பவரும் சேர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கருப்பண்ணனை பார்த்து அவரிடம் ரூ 50 ஆயிரம் பணம் கொடுத்து கண்ணனை கொலை செய்யக் கூறி உள்ளனர்.
அவரும் நைசாக பேசி கண்ணனை ஏமனூர் கிழக்கே உள்ள ஆத்துமேடு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு பின்னர் பிணத்தை எரித்து விட்டு வந்து உள்ளார்.
இந்த விவரங்கள் அனைத்தும் கருப்பண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்போது பெண்ணின் தந்தை மாது, மற்றும் பவுனேசன் ஆகிய 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சரண் அடைந்த கருப்பண்ணனை போலீசார் காட்டுக்குள் அழைத்துச் சென்று இன்று கண்ணனின் பிணத்தை எங்கு போட்டு எரித்தார் என்று அடையாளம் காட்ட உள்ளனர். பாதி எரிந்த நிலையில் பிணம் இருந்தால் அந்த இடத்திலேயே கண்ணனின் உடலை பரிசோதனை செய்யவும் ஏரியூர் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications