நிதாகத் பிரச்சனையில் சிக்கியுள்ளீர்களா? இதை முதலில் படிங்க
தம்மாம்: சவுதி அரேபியாவில் தற்போது நடந்து வரும் நிதாகத் பிரச்சனையில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் - தம்மாம் மற்றும் ஆந்திரா, மகாராஷ்டிரா, மங்களூர் தன்னார்வ தொண்டர்கள் தம்மாம் வி.எஃப்.எஸ் அலுவலகத்தில் வைத்து தற்காலிக பாஸ்போர்ட் பெற்றுக்கொள்வதற்கான படிவங்களை நிரப்புதல் மற்றும் சரிபார்த்துக் கொடுக்கும் சேவையினை மேற்கொண்டனர்.
நிதாகத் பிரச்சனையில் சிக்கியிருக்கும் இந்தியர்களில் பலருக்கு எவ்வாறு இந்த படிவங்களை பூர்த்தி செய்வது என்றோ, அல்லது அதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தோ தெரியவில்லை. எனவே, இந்த சேவையை இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் செய்து வருகிறது.
இதற்காக கடந்த வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், வெள்ளி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் இந்த பணி நடைபெற்றது. நிதாகத் பிரச்சனையில் சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இதன் மூலம் பயன் பெற்றார்கள். இந்த விபரங்களை இந்திய தூதரகம் சேகரிப்பது, மனுதாரர்கள் அனைவரையும் 'எக்சிட்' மூலம் தாயகத்திற்கு அனுப்ப வேண்டி சவூதி அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக என்பதையும் அனைவருக்கும் விளக்கப்பட்டது.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தற்போது தற்காலிக பாஸ்போர்ட் பெறுவதற்கான படிவங்களை சேகரித்து வருவதாகவும், ஆனால் இதுவரை எக்சிட் மூலம் தாயகம் அனுப்பும் பணி துவங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த படிவங்களை பூர்த்தி செய்து சேகரிக்கும் நிலையங்களாக பன்னாட்டு இந்தியப் பள்ளிகளான ரியாத், தம்மாம், ஜித்தா, ஜுபைல், புரைதா, கப்ஜி, தாயிப், மஜ்மாஃ மற்றும் தபூக் பள்ளிகள் முழுநேரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 50,000க்கும் அதிகமான படிவங்களை இந்திய தூதரகம் பெற்றிருக்கிறது. போதிய இந்திய ஆவணங்களோ, சவூதி ஆவணங்களோ இல்லாத இந்தியர்கள், சவூதி அரேபியாவை விட்டு தாயகம் திரும்ப விரும்பினால் அவர்கள் இந்த தற்காலிக பாஸ்போர்ட் பெற்று பிறகு அவர்கள் சவூதி அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
திரு. அப்துல் வஹீத் (சமூக சேவகர், ஹைதராபாத்) கூறுகையில், 'கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் இந்திய தூதரகத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறார்கள். காரணம், இந்திய பன்னாட்டுப் பள்ளிகள் மற்றும் வி.எஃப்.எஸ் அலுவலங்களில் இந்த படிவங்களை ஒப்படைப்பதற்குண்டான வழிவகைகள் செய்ததன் மூலம் பல்வேறு சிரமங்களை தவிர்க்க முடிந்தது' என்றார்.
திரு. அப்துஸ்ஸலாம் (கோ-ஆர்டினேட்டர், இந்தியா பிரடெர்னிடி ஃபோரம், தம்மாம்) கூறுகையில், 'நிதாகத் மூலம் இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்பதை உணர்ந்த நாங்கள் இதன் ஆரம்பம் முதலே ஹெல்ப் லைன் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் எங்களுக்கு கிடைத்த கோரிக்கைகளே இந்த ஹெல்ப் டெஸ்க் உருவாக்குவதற்கு காரணம். இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் எப்போதும் இந்திய சமூகத்திற்கான உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கிறது. சவூதி மன்னர் அளித்துள்ள கால அவகாசத்தை முழுஅளவில் இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு வழிகளில் நாங்கள் இந்திய மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications