பாரத் பெட்ரோலியத்தில் வேலை வாங்கி தருவதாக 12 பேரை ஏமாற்றிய வழக்கு: மேலும் ஒருவர் கைது
சென்னை: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 12 பேரை மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராயநகர் தெற்கு போக் ரோட்டில் வசிப்பவர் பாண்டித்துரை (வயது 52). இவரது வீட்டின் அருகே பரமசிவம் மளிகை கடை நடத்தி வருகிறார். பரமசிவத்திடம் தனக்கு பெரிய அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அதன் மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாங்கி தர முடியும் என்றும் பாண்டித்துரை கூறியுள்ளார்.
இதை உண்மையென நம்பிய பரமசிவம், தனக்கு தெரிந்த 12 நபர்களை பாண்டியத்துரையிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் சிந்தாதிரிப்பேட்டையில் கொரியர் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வரும் அருண் கிருஷ்ணா என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்து 12 பேரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 10 ஆயிரம் பெற்றனர்.
இதில் தனது பங்காக பாண்டித்துரை ரூ.15 லட்சம் பெற்றுள்ளார். பணம் செலுத்தியவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் என்ற லெட்டர் பேர்டு தயாரித்து, அதில் வேலைக்கான உத்தரவை பொது மேலாளர் கையெழுத்து இட்டதுபோல தயாரித்து வழங்கி உள்ளனர்.
வேலை நியமன கடிதத்தை பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கம்பெனியில் கடிதத்தை கொடுத்தபோது தான் அவை போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து பரமசிவம் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் கொடுத்ததன் பேரில் நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் உத்தரவிட்டார்.
புகாரின் அடிப்படையில், வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பாண்டித்துரை மற்றும் அருண் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருண் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது பாண்டிதுரையும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications