நிரம்பி வழியும் சென்னை- பெங்களூர் டபுள் டக்கர் ஏசி ரயில்
சென்னை: சென்னை-பெங்களூர் இடையே புதிதாக விடப்பட்டுள்ள டபுள் டக்கர் ஏ.சி. ரயில் நிரம்பி வழிகிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு இரண்டு அடுக்கு ஏ.சி. ரயில் சமீபத்தில் விடப்பட்டது. முற்றிலும் குளு குளு வசதி கொண்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டிக்கு 120 பேர் வீதம் 1,200 பயணிகள் இந்த ரயிலில் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த சொகுசு ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரயில் சேவை துவங்கப்பட்ட முதல் நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதி மக்களுக்கு பயனுள்ள இந்த ரயில் தற்போது நிரம்பி வழிகிறது. நேற்று அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அதே போல் இன்றும் 10 பெட்டிகளும் நிரம்பியது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய முடியாது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் பெட்டியில் நின்று செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை.
சேர் கார் இருக்கைகள் உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். தற்போது கோடை வெயில் வறுத்து எடுத்துவரும் நிலையில் குளு குளு பயணத்தை பொதுமக்கள் விரும்புகிறார்கள். சென்னையில் இருந்து பெங்களூருக்கு கட்டணம் ரூ.470 நிர்ணயிக்கப்பட்டாலும் அதை பெரிதாக நினைக்கவில்லை. பயணத்தின் போது சோர்வு, அசதி ஏற்படாமல் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதால் இரண்டு அடுக்கு ரயிலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications